கோவை : அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசை காட்டி ரூ.7 லட்சம் மோசடி செய்ததாக பெங்களூரைச் சேர்ந்த ஒருவரை கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
கோவை சரவணம்பட்டி ஸ்ரீராம் நகரைச் சேர்ந்த விக்னேஷ் (32), வேலை தேடி வந்தபோது கடந்த 2019-ஆம் ஆண்டு உறவினர் மூலம் பெங்களூரைச் சேர்ந்த உதய்தீப் என்பவருடன் அறிமுகமானார்.
அப்போது, தாம் இந்திய உணவுக் கழகத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினராக இருப்பதாகவும், கோவை சத்தி சாலை குருக்கம்பாளையத்தில் “ராதை” என்ற பெயரில் கன்சல்டன்சி நிறுவனம் நடத்தி வருவதாகவும் உதய்தீப் கூறியுள்ளார்.
மேலும், ஒன்றிய அரசின் பல்வேறு அதிகாரிகளுடன் தனக்கு தொடர்பு இருப்பதாகவும், அவர்களின் மூலம் அரசு வேலை வாங்கித் தர முடியும் என்றும், அதற்காக பணம் செலுத்த வேண்டும் என்றும் விக்னேஷிடம் தெரிவித்துள்ளார்.
இதனை நம்பிய விக்னேஷ், கடந்த 2019 முதல் 2023 வரை பல்வேறு கட்டங்களாக உதய்தீப்பின் வங்கிக் கணக்கில் மொத்தம் ரூ.7 லட்சம் செலுத்தியுள்ளார்.
ஆனால், உறுதியளித்தபடி அரசு வேலை வாங்கித் தரவில்லை. மேலும், பெற்றுக் கொண்ட பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த விக்னேஷ் விசாரித்தபோது, இதேபோல் பலரிடமும் லட்சக்கணக்கான ரூபாய் மோசடி செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இந்த மோசடியில் உதய்தீப்பின் மனைவி செல்வராணி உள்ளிட்ட மேலும் 6 பேருக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து விக்னேஷ், கடந்த 26-ஆம் தேதி கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அரசு வேலை வாங்கித் தருவதாக பலரிடம் இருந்து லட்சக்கணக்கில் பணம் பெற்று மோசடி செய்தது உறுதியானது.
இதையடுத்து, உதய்தீப் (43) என்பவரை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், இந்த மோசடியில் தொடர்புடைய மற்ற நபர்களின் பங்கு மற்றும் ஏமாற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


