கோவை: நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
தவெக அரசு சிறுபான்மையினர் விவகாரங்களில் மெத்தனப்போக்கைக் கடைபிடிப்பதாகவும், ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாநிலச் செயலாளர் சாகுல் ஹமீது தெரிவித்துள்ளார்.
மதம் மாறியவர் பிற்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லிம் (BC Muslim) அந்தஸ்தை கோர முடியாது. அவர் முஸ்லிம் என்ற அடிப்படையில் மட்டுமே கருதப்படுவார் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கடந்த ஜூன் 25-ஆம் தேதி தீர்ப்பளித்துள்ளார்.
இது சமூக நீதிக்கு எதிரானது என்று இஸ்லாமிய அமைப்புகள் விமர்சித்து வருகின்றன.
இந்த சூழலில், ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்புக்கு எதிராக கோவை உக்கடம் பகுதியில் தமுமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்றும், இதனை தமிழக அரசு எதிர்க்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதனைத் தொடர்ந்து தமுமுக மாநிலச் செயலாளர் சாகுல் ஹமீது செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் இஸ்லாத்திற்கு புதிதாக மதம் மாறியவர்களின் உரிமையை பறிக்கும் வகையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ள 3.5 சதவீத இடஒதுக்கீடு என்பது எண்ணற்ற தலைவர்கள் நடத்திய நீண்டகால போராட்டத்தின் பலனாக கிடைத்த உரிமையாகும். அந்த உரிமையை, இஸ்லாத்திற்கு புதிதாக வந்துள்ள சகோதரர்களுக்கு மறுக்கும் தீர்ப்பை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் வழங்கியுள்ளார்.
இந்த தீர்ப்பு இஸ்லாமியர்களை வஞ்சிக்கும் விதமாகவும், தனிமைப்படுத்தும் நோக்கத்துடனும் இருப்பதாக நாங்கள் கருதுகிறோம்.
நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் நீதிபதியாக இருக்கும் வரை, இஸ்லாமியர்களுக்கு எதிரான தீர்ப்புகளே வழங்கப்படுகின்றன என்ற எண்ணம் எங்கள் சமூகத்தில் உருவாகியுள்ளது.
தமிழக அரசு உடனடியாக தலையிட்டு, இந்த தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, அதை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
இந்த கோரிக்கை ஏற்கப்படாவிட்டால், தமிழகம் முழுவதும் போராட்டம் மேலும் தீவிரப்படுத்தப்படும். அனைத்து தரப்பு மக்களையும் ஒருங்கிணைத்து மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம்.
திருப்பரங்குன்றம் விவகாரத்திலும், குர்பானி விவகாரத்திலும் முதல்வர் விஜய் மவுனமாக இருந்தார். மக்கள் குரல் கொடுத்த பிறகே மேல்முறையீடு செய்வதாக கூறியிருக்கிறார்கள். சிறுபான்மையினர் தொடர்பான விவகாரங்களில் தமிழக அரசு மெத்தனப்போக்கில் செயல்படுகிறது. இவ்வாறு சாகுல் ஹமீது கூறினார்.


