கோவை : கோவை காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில், நள்ளிரவு நேரத்தில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த வாலிபரை தட்டிக்கேட்ட பழ வியாபாரியை பிளேடால் தாக்கிய வாலிபரை காட்டூர் போலீசார் கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு அருகே உள்ள நடுத்தெருவைச் சேர்ந்தவர் ஞானசேகரன் (36). இவர் கோவை காந்திபுரம் மத்திய பேருந்து நிலைய வளாகத்தில் தங்கி, அங்கு வரும் பேருந்துகளில் ஏறி பழ விற்பனை செய்து வாழ்ந்து வருகிறார்.
நேற்று முன்தினம் நள்ளிரவு, பேருந்து நிலையத்தில் ஜெகநாதன் என்பவருடன் ஞானசேகரன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு ஒரு வாலிபர் சந்தேகத்திற்கிடமான வகையில் அங்குமிங்கும் சுற்றித்திரிந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, “நள்ளிரவு நேரத்தில் இங்கு ஏன் சுற்றிக் கொண்டிருக்கிறாய்?” என்று ஞானசேகரன் அந்த வாலிபரிடம் கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர், ஞானசேகரனை தகாத வார்த்தைகளால் திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பின்னர், திடீரென தனது சட்டைப் பையிலிருந்து பிளேடை எடுத்து, ஞானசேகரனின் வலது கன்னத்தில் அறுத்துள்ளார்.
இந்த தாக்குதலில் ஞானசேகரனின் கன்னத்தில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்த பொதுமக்கள் ஓடி வந்தனர். இதையடுத்து, கொலை மிரட்டல் விடுத்த அந்த வாலிபர் அங்கிருந்து தப்பிச் சென்றார்.
காயமடைந்த ஞானசேகரனை பொதுமக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து ஞானசேகரன் அளித்த புகாரின் பேரில் காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து, பேருந்து நிலையப் பகுதியில் சுற்றித்திரிந்த சந்தேகநபரை பிடித்து விசாரித்தபோது, அவர் நீலகிரி மாவட்டம், குன்னூர் கிரேக்மோர் எஸ்டேட்டைச் சேர்ந்த நிர்மல் குமார் (27) என்பது தெரியவந்தது.
இதையடுத்து, நிர்மல் குமாரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


