கோவை: கோவையில் ஆளை மாற்றி கடத்திய வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவையில் காங்கிரஸ் பிரமுகரை ஆள் மாற்றி கடத்திய புகாரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மீதமுள்ளவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
கோவை மாநகர் SIHS காலனி மூகாம்பிகை நகரை சேர்ந் தனசேகர் என்பவர் காங்கிரஸ் கட்சி பிரமுகராக உள்ளார்.
கடந்த 5-ந் தேதி தனது வீட்டின் முன்பு காரை சுத்தம் செய்து கொண்டு இருந்த போது வேறொரு காரில் வந்து இறங்கிய 5 பேர் கொண்ட கும்பல் தனசேகரை, கடத்திச்சென்றனர்.
பின்னர் அவரை விடுவிக்க 2 கோடி கேட்டு மிரட்டினர். அவர் தன்னிடம் பணம் இல்லை என்றபோதுதான், வேறு நபரை கடத்துவதற்கு பதிலாக தனசேகரை கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து அந்த கும்பல் தனசேகரிடம் இருந்த செல்போன், கார் சாவி மற்றும் வீட்டுச்சாவியை பறித்துக்கொண்டு அவரை பாலக்காடு ரோட்டில் இறக்கிவிட்டு சென்றது. அதே சமயம் தனசேகர் மீது தாக்குதல் நடத்தியதால் அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
இது குறித்த புகாரின்பேரில் சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் 5 பேர் கொண்ட கும்பலுக்கு போத்தனூரை சேர்ந்த போலீஸ் கார்த்தி என்பவர் வழிநடத்தியது தெரியவந்தது. இதையடுத்து போலீஸ் கார்த்தி, திருச்சியை சேர்ந்த வைரபெருமாள் (30) மூர்த்தி, அன்பு மற்றும் நெல்லையை சேர்ந்த 2 பேர் என்று மொத்தம் 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.
இந்த நிலையில் கரூர் பகுதியில் வைரபெருமாள் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் அர்ஜூன் குமார் தலைமையிலான போலீசார் கரூருக்கு விரைந்து சென்றனர். அங்குள்ள காந்தி கிராமம் பகுதியில் உள்ள வீட்டில் தங்கி இருந்த வைரபெருமாளை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
பின்னர் அவரை கோவை அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைகாக உள்ள கார்த்தி, மூர்த்தி, அன்பு உள்பட 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட வைரப் பெருமாள் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.





