கோவை: கோவை மாநகராட்சியில் 20 ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்ட மூன்று மாடி கட்டிடம் அகற்றும் பணி துவங்கியது.
கோவை மாநகராட்சி ஆவாரம்பாளையம் பகுதியில் கடந்த 1971 ஆம் ஆண்டு பாலாஜி நகர் என்கின்ற பெயரில் 8 ஏக்கருக்கு லே-அவுட் பிரிக்கப்பட்டது. இதற்காக 64 சென்ட் பரப்பளவு ரிசர்வ் சைட் ஒதுக்கப்பட்டது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு தாமோதரன் என்பவர் அதில் ஏழு சென்ட் நிலத்தில் வணிக வளாகம் கட்டினார்.
நாளடைவில் அது 11 சதுர அடி பரப்பளவில் மூன்று மாடிகளுடன் பிரம்மாண்ட வணிக வளாகமாக மாறியது. 12 கடைகள் வாடகைக்கு விட்டும் வளாகத்தின் மற்றொரு பிரிவில் லாஜும் இயங்கி வந்தது. ரிசர்வ் சைட் பாதுகாப்பு சங்கம், பாலாஜி நகர் குடியிருப்போர் நல சங்கத்தினர் மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். மாநகராட்சி பல்வேறு முறையில் நோட்டீஸ் அனுப்பியும் கடைகளை காலி செய்யவில்லை, கடந்த 2016 ஆம் ஆண்டு மாநகராட்சி நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து.
அதில் கடந்த டிசம்பர் மாதம் கட்டடங்களை அகற்ற உத்தரவிடப்பட்டது. இதை எதிர்த்து தாமோதரனின் குடும்பத்தினர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அந்த வழக்கு கடந்த பிப்ரவரி மாதம் தள்ளுபடி செய்யப்பட்டது. நீதிமன்ற உத்தரவுபடி கட்டடத்தை இடிக்கும் பணியை மாநகராட்சி நிர்வாகம் நேற்று துவங்கியது.
கோவை மாநகராட்சியின் 40 க்கும் மேற்பட்ட மாநகராட்சி அதிகாரிகள், காவல்துறையினர் உதவியுடன் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது;
மாநகராட்சி வரலாற்றில் தாங்கள் அகற்றும் அதிக பரப்பளவிலான ஆக்கிரமிப்பு கட்டிடம் இதுதான். தற்போதைய சந்தை மதிப்பில் 7 சென்ட் நிலம் ரூபாய் 3 கோடி மதிப்பை கொண்டு உள்ளது. கட்டிடம் சுமார் ரூபாய் 5 கோடி மதிப்பு கொண்டது. பெரிய கட்டடம் என்பதால் அடுத்த 15 நாட்களுக்கு கட்டடத்தை இடிக்க திட்டமிடப்பட்டு உள்ளதாகவும், பொக்லைன், ஜே.சி.பி, பிரேக்கர், கிரேன், டிரில்லர் உள்ளிட்ட கருவிகள் மூலம் மூன்றாவது தளத்தில் இருந்து படிப்படியாக அகற்றப்படும் என்றும் தெரிவித்தனர்.





