கோவை : கோவையில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அரசு பேருந்து ஓட்டுநர் ஒருவரை பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே வஞ்சியம்மன் நகர், திருமுருகன் நகர் பகுதியைச் சேர்ந்த சங்கர் (36) என்பவர் அரசு போக்குவரத்துக் கழகத்தில் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருகிறார்.
சம்பவத்தன்று, அவர் தனது உறவினர் வீட்டிற்கு சென்றிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, வீட்டின் வெளியே 4 வயது சிறுமி ஒருவர் தனியாக விளையாடிக் கொண்டிருந்தார்.
இதையடுத்து, சிறுமியை வீட்டிற்குள் அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பின்னர் வீட்டிற்கு திரும்பிய சிறுமி அழுதபடி நடந்த சம்பவத்தை தனது பெற்றோரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து சிறுமியின் பெற்றோர் பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், சங்கர் மீது குற்றச்சாட்டு உறுதியானதைத் தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அரசு பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்ட சம்பவம் கோவை மாவட்டத்தில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.





