கோவை: கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படும் 32 வயது நபரை சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் கைது செய்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் செயல்பட்டு வரும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினருக்கு, சிறுமிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின்பேரில் உடனடியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
விசாரணையில், கருமத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்த உத்தமன் (32) என்பவர் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தது உறுதி செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து, உத்தமனை கைது செய்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர், கருமத்தம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர், குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் போக்சோ சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டார்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் புகாரின் அடிப்படையில் விரைந்து நடவடிக்கை எடுத்து குற்றவாளியை கைது செய்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினரின் பணியை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டியதுடன், பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான புகார்களில் தொடர்ந்து விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.




