கோவை: ஜனநாயகன் பாஸ்போர்ட் மக்கள் விழிப்புணர்வு இயக்கம் தொடங்கினார்
கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ்
ஜனநாயகன் திரைப்படக் கொண்டாட்டத்துடன் சமூகப் பொறுப்பையும் விதைக்கும் புதிய முயற்சியாக, ஜனநாயகனைக் கொண்டாடுவோம் பொறுப்புள்ள நாயகனாக மாறுவோம் என்ற முழக்கத்துடன் “ஜனநாயகன் பாஸ்போர்ட்” மக்கள் விழிப்புணர்வு இயக்கத்தை தொடங்கினார் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ்.
தளபதி, தமிழக முதல்வர் விஜய் நடித்துள்ள “ஜனநாயகன்” திரைப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு, திரைப்படக் கொண்டாட்டத்தை சமூகப் பொறுப்புணர்வுடன் இணைக்கும் வகையில், கவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் கனிமொழி சந்தோஷ் “ஜனநாயகன் பாஸ்போர்ட்” என்ற மக்கள் விழிப்புணர்வு இயக்கத்தை தொடங்கினார்.
“ஜனநாயகனைக் கொண்டாடுவோம்… பொறுப்புள்ள நாயகனாக மாறுவோம்!” என்ற முழக்கத்துடன் தொடங்கப்பட்ட இந்த இயக்கம், திரைப்படத்தை வெறும் பொழுதுபோக்காக மட்டும் பார்க்காமல், அதன் மூலம் சமூகத்தில் ஒவ்வொரு குடிமகனும் தனது ஜனநாயக மற்றும் சமூகப் பொறுப்புகளை உணர்ந்து செயல்பட வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த “ஜனநாயகன் பாஸ்போர்ட்” மூலம் சாலை பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தூய்மையான சூழல், மனிதநேயம், சட்டங்களை மதித்தல், பொது இடங்களைப் பாதுகாத்தல், சமூக ஒற்றுமை உள்ளிட்ட பொறுப்புமிக்க குடிமகனின் அடிப்படை கடமைகள் குறித்து உறுதிமொழி எடுக்க மக்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர்.
திரையில் ஜனநாயகன். சமூகத்தில் பொறுப்புள்ள நாயகன்” என்ற சிந்தனையை மக்களிடம் கொண்டு சேர்த்து, பொறுப்புணர்வும் சமூக அக்கறையும் கொண்ட குடிமக்களை உருவாக்குவதே இந்த முன்னெடுப்பின் முக்கிய நோக்கமாகும், முதல் கட்டமாக தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மற்றும் விஜய் ரசிகர்களுக்கு ஜனநாயகன் பாஸ்போர்ட் புத்தகம் வழங்கினார். தொடர்ந்து அவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான திரைப்பட ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாகமாக பங்கேற்று, பொறுப்புள்ள குடிமகனாக செயல்பட உறுதிமொழி ஏற்றனர்.
சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் ஏற்கனவே பசுமை கவுண்டம்பாளையம் மற்றும் கே ஜி எப் என்ற திட்டங்களை தொடங்கி செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.





