கோவை: லஞ்சம் வாங்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் காவல் உதவி ஆய்வாளர் (எஸ்.ஐ.) ஒருவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.5,000 அபராதம் விதித்து திருச்சி ஊழல் தடுப்பு வழக்குகள் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கோவை மாவட்டம் உருமண்டம்பாளையத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் இருசக்கர வாகனம், 2009 அக்டோபரில் மணப்பாறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் விபத்துக்குள்ளானது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், ஆறுமுகத்தை ஜாமீனில் விடுவித்து, அவரது இருசக்கர வாகனத்தை மோட்டார் வாகன ஆய்விற்காக அனுப்பி வைத்தனர்.
அப்போது மணப்பாறை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றிய ராஜாத்தி, வாகனம் தொடர்பான நடவடிக்கையை மேற்கொள்வதற்காக ரூ.1,500 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத ஆறுமுகம், 2009 அக்டோபர் 29-ஆம் தேதி திருச்சி லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தார். அதன் பேரில், ரசாயனம் தடவப்பட்ட ரூபாய் நோட்டுகளை லஞ்ச ஒழிப்புப் போலீசார் அவரிடம் வழங்கி, மறுநாள் மணப்பாறை காவல் நிலையத்திற்கு அனுப்பினர்.
திட்டமிட்டபடி ஆறுமுகம் லஞ்சத் தொகையை ராஜாத்தியிடம் வழங்கியபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புப் போலீசார் கையும் களவுமாக பிடித்து அவரைக் கைது செய்தனர். பின்னர் இந்த வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு வழக்குகள் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில், நீதிபதி புவியரசு தீர்ப்பளித்து, முன்னாள் எஸ்.ஐ. ராஜாத்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5,000 அபராதமும் விதித்தார். இந்த தீர்ப்பு 2009-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட லஞ்ச வழக்கில் சுமார் 16 ஆண்டுகளுக்குப் பிறகு வழங்கப்பட்டுள்ளது.





