கோவை: டீக்கடை உரிமையாளரை கடத்தி ரூ.2 லட்சத்துக்கும் மேல் பணம் பறிக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட 5 ரவுடிகள் மீது கோவை மாநகர போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரைச் சேர்ந்த வேல்முருகன் (34), கோவை சேரன் மாநகரில் டீக்கடை நடத்தி வருகிறார். இவரும், அவரது நண்பரான நாகராஜ் (36) என்பவரும் முன்பு கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
சிறையில் இருந்தபோது, முதலில் ஜாமீனில் வெளியே வருபவர் மற்றவருக்கும் ஜாமீன் பெற உதவ வேண்டும் என இருவரும் முடிவு செய்திருந்தனர். ஆனால் முதலில் ஜாமீனில் வெளியே வந்த வேல்முருகன், நாகராஜை ஜாமீனில் எடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த நாகராஜ், தன்னைச் சந்திக்க வந்த நண்பர்களிடம் வேல்முருகனை கடத்தி பணம் பறிக்குமாறு கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து கடந்த மாதம் 18-ஆம் தேதி இரவு, ஆறு பேர் கொண்ட கும்பல் வேல்முருகனை காரில் கடத்திச் சென்று, ரூ.2 லட்சத்துக்கும் அதிகமான தொகையை கேட்டு மிரட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. அவர்களிடமிருந்து தப்பிய வேல்முருகன், பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
வழக்குப்பதிவு செய்த போலீசார், தர்மராஜ், வெங்கட்பிரபு, இசக்கிமுத்து, சசிகுமார், சுந்தரமகாலிங்கம் மற்றும் சுதீப் ஆகியோரை கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட தர்மராஜ், வெங்கட்பிரபு, இசக்கிமுத்து, சசிகுமார் மற்றும் சுந்தரமகாலிங்கம் ஆகிய 5 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க பீளமேடு காவல் ஆய்வாளர் அர்ஜூன்குமார் பரிந்துரை செய்தார்.
அதனை ஏற்றுக் கொண்ட கோவை மாநகர காவல் ஆணையர் கண்ணன், 5 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.





