கோவை: சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட வாலிபர் மீது, பொதுமக்களின் பாதுகாப்பு கருதி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கோவை தெலுங்குபாளையம், சுப்பிரமணிய உடையார் வீதியைச் சேர்ந்த சுரேஷ் (25) என்பவர், கடந்த மாதம் 21-ஆம் தேதி சிறுவன் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுவன் அளித்த புகாரின் பேரில், கோவை மத்திய அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சுரேஷை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில், சுரேஷின் செயல்பாடுகளை கருத்தில் கொண்டு, அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மத்திய அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மாநகர காவல் ஆணையர் கண்ணனுக்கு பரிந்துரை செய்தார்.
அந்த பரிந்துரையை ஏற்றுக் கொண்ட மாநகர காவல் ஆணையர் கண்ணன், சுரேஷை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து, அவர் மீது குண்டர் சட்டம் அமல்படுத்தப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.





