கோவை: கோவை மாநகராட்சி சார்பில் நடைபெற்ற தூய்மைப் பணியாளர்களுக்கான உரிமை முகாமில் 3,963 பேர் பங்கேற்று பயனடைந்தனர். அரசு நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு வழங்கப்பட்டதுடன், 14 பேருக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு அட்டைகளும் வழங்கப்பட்டன.
முகாமில் வருவாய்த்துறை, பள்ளிக்கல்வித்துறை, மருத்துவத்துறை, திறன் மேம்பாட்டு பயிற்சி நிறுவனம், தாட்கோ, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை உள்ளிட்ட 12 அரசுத் துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்று, அரசு நலத்திட்டங்கள் மற்றும் சேவைகள் குறித்து தூய்மைப் பணியாளர்களுக்கு விரிவான விளக்கமளித்தனர்.
மேலும், பல்வேறு நலத்திட்டங்களைப் பெறுவதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டதுடன், இ.எஸ்.ஐ., பி.எப். உள்ளிட்ட தொழிலாளர் நலத் திட்டங்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்த சிறப்பு முகாமில் மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களிலிருந்தும் மொத்தம் 3,963 தூய்மைப் பணியாளர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். மேலும், 14 பேருக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்ட அட்டைகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி அதிகாரிகள், பல்வேறு அரசுத் துறை அலுவலர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.




