கோவை: கோனியம்மன் கோயில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கையை, கையாடல் செய்த புகாரில் கோயில் பூசாரி உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவையில் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றான கோனியம்மன் திருக்கோயில், டவுன்ஹால் மணிக்கூண்டு அருகே அமைந்துள்ளது.
கோவையின் காவல் தெய்வம் என்று பக்தர்கள் பரவசத்துடன் அழைக்கும் இந்த அம்மன் கோயிலில், ஆண்டுதோறும் நடைபெறும் புகழ்பெற்ற தேர்த்திருவிழாவில் உள்ளூர் மட்டுமல்லாமல் வெளி மாவட்டங்கள் மற்றும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டு செல்கின்றனர்.
இந்தக் கோயிலில் 9 நிரந்தர உண்டியல்களும், 6 தற்காலிக உண்டியல்களும் உள்ளன.
இதனிடையே கடந்த 15-ஆம் தேதி இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் மேற்பார்வையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.

இந்த நிலையில், தற்காலிக உண்டியல்களில் ஒன்றிலிருந்த காணிக்கைத் தொகையை, பூசாரிகள் உதவியுடன், கோயில் ஊழியர்களான பாலசுப்ரமணியன் மற்றும் பிரதீப் ஆகியோர் கையாடல் செய்ததாக அதனைப் பார்த்த பக்தர்கள் குற்றம்சாட்டினர்.
Also Read: கோவையில் விசாரணைக்கு சென்ற போலீஸ்காரர் மீது தாக்குதல்; திருநங்கைகள் 4 பேர் கைது
இதில் கோயில் செயல் அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் துணை இருப்பதாகக் கூறி பக்தர்கள் இந்து சமய அறநிலையத்துறை தலைமையகத்திற்கு புகார் அளித்தனர்.
இந்தப் புகாரின் அடிப்படையில், இந்து சமய அறநிலையத்துறையின் கோவை மண்டல இணை ஆணையர் ரமேஷ் தலைமையிலான அதிகாரிகள் நேற்று கோவை கோனியம்மன் கோயிலில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். முறைகேடு தொடர்பாக கோயில் வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணையில் உண்டியல் பணம் ரூ.31 ஆயிரம் திருடப்பட்டது தெரியவந்தது.
VIDEO
இதனைத் தொடர்ந்து கோயில் செயல் அலுவலர் குமார் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், கோயில் பூசாரி கிருஷ்ணராஜ், டிக்கெட் விற்பனையாலர் பாலசுப்பிரமணியம், உதவியாளர்கள் சரவணன் மற்றும் பிரதீப் குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.





