கோவை: பள்ளிகளில் பல் மருத்துவ முகாம் நடத்தி போதைப் பழக்கத்தில் சிக்கும் மாணவர்களை மீட்க போலீசார் புது முயற்சி மேற்கொள்ள உள்ளனர்.
பள்ளிக் குழந்தைகளிடையே ஊடுருவியுள்ள கஞ்சா மற்றும் போதைப்பொருள் பழக்கத்தைத் தடுத்து, மாணவர்களை நல்வழிப்படுத்தும் நோக்கில், மாநகர போலீசார் சார்பில் ‘பள்ளிகளில் பல் மருத்துவ முகாம்’ நடத்தும் புதிய திட்டத்தை தயார் செய்து வருகின்றனர்.
சமீபகாலமாகப் பள்ளி மாணவர்களைக் குறிவைத்து சில போதைப்பொருள் கும்பல்கள் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகள், குட்கா போன்றவற்றை விற்பனை செய்து வருகின்றனர். இதைத் தடுக்கும் பொருட்டு, போதைப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ள மாணவர்களை ஆரம்பத்திலேயே கண்டறிய மாநகர போலீசார் இந்த திட்டத்தை கையில் எடுத்துள்ளனர்.
நேரடியாகச் சென்று விசாரணை நடத்தினால் மாணவர்கள் பயப்படவோ அல்லது உண்மையை மறைக்கவோ வாய்ப்புள்ளது. இதனால், பல் மருத்துவ முகாம் என்ற பெயரில் இந்த ஆய்வு நடத்தப்படவுள்ளது.
இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கஞ்சா மற்றும் போதைப்பொருட்களைப் பயன்படுத்தும் மாணவர்களின் பற்களின் நிறம் மாறுபடும், ஈறுகளில் வீக்கம், வாய் துர்நாற்றம் மற்றும் கறைகள் தோன்றும். மருத்துவ பரிசோதனையின் போது பல் மருத்துவர்கள் மூலம் இத்தகைய அறிகுறிகளைக் கொண்ட மாணவர்கள் தனியாகக் கண்டறியப்படுவர்.
மனநல ஆலோசனை
பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களைத் தண்டிக்காமல், அவர்களின் பெற்றோர் மற்றும் மனநல ஆலோசகர்கள் உதவியுடன் அவர்களுக்கு உரிய ஆலோசனைகள் வழங்கி, போதைப் பழக்கத்தில் இருந்து மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்ந்து மாணவர்களுக்குப் போதைப்பொருட்களைச் சப்ளை செய்வது யார்? அவர்கள் எங்குச் கூடுகிறார்கள்? என்பதை மாணவர்களின் அடையாளத்தை ரகசியமாக வைத்து விசாரணை நடத்தப்படும். அதன் பின், அந்த போதை கும்பலை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
Also Read: கோனியம்மன் கோவில் உண்டியல் பணம் திருட்டு- அதிகாரிகள் சஸ்பெண்ட்- அமைச்சர் நடவடிக்கை…
இந்தத் திட்டம் தற்போது ஆலோசனை மற்றும் திட்டமிடல் நிலையில் மட்டுமே உள்ளது. முதற்கட்டமாக, அரசுப் பள்ளிகளில் இத்திட்டத்தைச் செயல்படுத்தக் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்பின்னர், இதன் வெற்றி மற்றும் சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து தனியார் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.





