கோவை: கோவை அருகே சுண்டக்காமுத்தூர், தியாகராஜன் நகரைச் சேர்ந்தவர் சஞ்சய். என்ஜினியரான இவர், கோவையில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
சில நாட்களுக்கு முன்பு சஞ்சய் தனது செல்போனில் ‘Grindr’ செயலியை பதிவிறக்கம் செய்துள்ளார். அந்த செயலி மூலம் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ஆத்விக் என்ற செல்வம் என்பவருடன் அறிமுகமாகி, இருவரும் தொடர்ந்து பேசி நட்பை வளர்த்துள்ளனர்.
பின்னர் நேரில் சந்திக்க முடிவு செய்த நிலையில், சஞ்சய் கூறியபடி சுண்டக்காமுத்தூர் அருகே ஆத்விக் காரில் வந்துள்ளார். காரில் மேலும் மூன்று பேர் இருந்தனர். அவர்கள் தனது நண்பர்கள் என ஆத்விக் கூறியதை நம்பி சஞ்சய் காரில் ஏறியுள்ளார்.
சிறிது தூரம் சென்றதும் கார் சிறுவாணி சாலையை நோக்கி திருப்பப்பட்டது. அப்போது காரில் இருந்த நான்கு பேரும் சேர்ந்து சஞ்சயை சரமாரியாக தாக்கி, சத்தம் போட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர். பின்னர் அவர் அணிந்திருந்த தங்கச் செயின், இரண்டு தங்க மோதிரங்கள் மற்றும் ரூ.5,000 ரொக்கப் பணத்தை பறித்துள்ளனர். பறிக்கப்பட்ட நகை மற்றும் பணத்தின் மொத்த மதிப்பு ரூ.1.5 லட்சத்திற்கும் அதிகம் என கூறப்படுகிறது.
இதையடுத்து ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் சஞ்சயை காரிலிருந்து தள்ளிவிட்டு, நால்வரும் தப்பிச் சென்றனர்.
சம்பவம் குறித்து சஞ்சய் பேரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், இந்த சம்பவத்தில் நெல்லையைச் சேர்ந்த ஆத்விக், அவரது நண்பர்களான சக்தி, விஜய் ராம், சுந்தர் மற்றும் சுடலைமணி ஆகியோர் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்தது.
இதையடுத்து பேரூர் பகுதியில் பதுங்கியிருந்த ஆத்விக், சக்தி, விஜய் ராம் மற்றும் சுந்தர் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள மற்றொரு நபரான சுடலைமணியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
செல்போன் செயலி மூலம் பழகி திட்டமிட்டு ஐ.டி. ஊழியரை கடத்தி நகை, பணம் பறித்த சம்பவம் கோவை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





