கோவை: சுதந்திர தினம் நெருங்கி வரும் நிலையில் கோவை ரயில் நிலையத்தில் பலத்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நாட்டின் சுதந்திர தின விழாவை முன்னிட்டு, அசம்பாவித சம்பவங்களைத் தடுக்கும் பொருட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, கோவை ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் மற்றும் பாதுகாப்புப் படையினர் இணைந்து தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
சுதந்திர தின பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கோவை ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை (RPF), ரயில்வே காவல் துறை (GRP) மற்றும் வெடிகுண்டு கண்டறியும் மற்றும் செயலிழக்கச் செய்யும் பிரிவு (BDDS) இணைந்து இந்த கூட்டு சோதனையை மேற்கொண்டன.
ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள், அவர்களின் உடைமைகள், மற்றும் நடைமேடைகளில் உள்ள சந்தேகத்திற்குரிய பொருட்கள் அனைத்தும் மோப்ப நாய் மற்றும் நவீன வெடிகுண்டு கண்டறியும் கருவிகள் மூலம் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
மேலும், பார்சல் அலுவலகம் மற்றும் பார்சல் ரயில்களில் ஏற்றப்படும் பொருட்களையும் அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்தனர். பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய, ரயில் நிலையம் முழுவதிலும், ரயில்களிலும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




