கோவை: பள்ளி, கல்லூரிகள் அருகே பீடாக்கள் வடிவில் உலா வரும் புகையிலை பொருள் விற்பனை ஜோராக நடந்து வருகிறது. இதனை பயன்படுத்தும் இளைஞர்களுக்கு மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
உணவு அருந்தியதும் வெற்றிலை போடும் பழக்கம் அந்த காலங்களில் இருந்து வந்தது. தற்போது அந்த வெற்றிலை பீடாவாக மாறி சாப்பிட்டு வருகிறோம். திருமண நிகழ்ச்சிகளில் பீடா இல்லாமல் இருப்பது இல்லை, அதுமட்டும் அல்லாமல் எல்லா நிகழ்ச்சிகளிலும் பீடா ஒரு முக்கிய உணவாக மாறிவிட்டது.
அதேபோல ஓட்டல்களில் பீல் போடப்படும் இடத்தில் கண்டிப்பாக பீடா இருக்கும். அதை பார்த்தவுடன் அதற்கும் சேர்த்து பீல் போட்டு விடுவோம். அந்த அளவிற்கு பீடா மீது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பீடா பிரியர்களாக இருந்து வருகிறார்கள். பீடாவில் பட்டர், ஸ்வீட், குல்கந்த், சுபாரி, ஐஸ் பீடா என பலவகைகள் உள்ளன.
இந்த நிலையில் கோவையில் முக்கிய இடங்களான காந்திபுரம், ஆர்.எஸ்.,புரம், பூ மார்க்கெட், வடவள்ளி, சரவணம்பட்டி, போத்தனூர் மற்றும் புறநகர் பகுதிகளில், 100க்கும் மேற்பட்ட பீடா கடைகள் உள்ளன. இங்கு பட்டர், ஸ்வீட், குல்கந்த், சுபாரி, ஐஸ் பீடாக்களை தவிர, 420, 120 என்ற பீடாக்கள் கிடைக்கிறது.
இதில், 420 பீடாவில் படபத்தி, புகையிலை துண்டு, உட்பட கலவைகள் கொண்டு தயாரிக்கப்பட்டு ரூ.80 முதல், 100 வரையும், 120 பீடாவில் புகையிலை பேஸ்ட், புகையிலை தூள், இமாம் டச் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்டு ரூ.30 முதல், 50 வரையும் விற்கப்படுகிறது.
சாதாரணமாக பீடாக்கள் ஜீரணத்திற்காக சாப்பிடுவார்கள். ஆனால் இந்த, 420, 120 வகை பீடாக்களில் சிறிய அளவிலான போதைக்காக பயன்படுத்தி வருகின்றனர். இந்த வகை பீடாக்களை சாப்பிட்டு போதையில் வரும் போது வாகன சோதனையில் போலீசாரிடம் மாட்டி கொள்வது இல்லை.
சில பீடாக்கடைகள் கல்லூரி, பள்ளிகள் அதிகம் உள்ள பகுதிகளில் செயல்பட்டு வருகிறது. இதனால் மாணவர்கள் இதற்கு அடிமையாகி விடுகின்றனர். பெற்றோரும் கண்டு பிடிக்க முடியாததால் அவர்களுக்கு அது சுலபமாகிவிட்டது. கோவையில் உள்ள வடமாநில தொழிலாளர்களும் தினமும் இந்த பீடாக்களை வாங்காமல் செல்வது இல்லை.

இதனால் பீடா கடைகளில் எப்போதும் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். அனைத்து கடைகளும் ஒரே குழுவாக செயல்படுகிறது. இதன் மூலம் பீடா கடைகள் மாதம் லட்ச கணக்கில் பணத்தை சம்பாதித்து வருகின்றனர். பீடா கடைகளுக்கு ரெகுலர் கஸ்டமராகி விட்டால் கஞ்சா சிகரெட்டும் விற்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த கடைகளை நடத்தி வருவது வடமாநிலத்தவர்களே அதிகம்.
420, 120 பீடாக்களால் நரம்பு தளர்ச்சி, புற்று நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் இந்த வகை பீடா சென்னையில் தடை செய்யப்பட்டு உள்ளது. கோவையில் குட்கா, கஞ்சா போன்ற போதை பொருட்களை போலீசார் ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகளையும், விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றனர்.
ஆனால் பீடா ரூபத்தில் போதை பொருள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்காகவே புகையிலை பொருட்கள் ரயில்கள், இருசக்கர வாகனங்களில் கடத்தி வருகின்றனர். மேலும், புகையிலை பேஸ்ட்டாக வருவதால் போலீசாரிடம் அவை எளிதில் மாட்டிக் கொள்வது இல்லை. சுலபமாக தப்பி விடுகின்றனர். இதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புளிச்… புளிச்…
போதை பீடாக்களை உண்ணும் சிலர், தங்கள் உடல் நலத்தைக் கெடுத்துக் கொள்வது மட்டுமல்லாது, கோவை நகரின் அழகையும் கெடுத்து வருகின்றனர். பீடாவை போட்டு மென்றுவிட்டு, ஆங்காங்கே எச்சிலைத் துப்பிவைக்கின்றனர்.
குறிப்பாக ஆர்.எஸ்.புரம், வடகோவை, ரங்கே கவுண்டர் வீதி உள்ளிட்ட முக்கிய பகுதிகளின் வீதிகளில் பல்வேறு இடங்கள் பீடா கரைகளுடன் காட்சியளிக்கின்றன. இதனை மாநகராட்சி நிர்வாகம் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும், முளையிலேயே கிள்ளி எரிய வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.
Coimbatore Pita Shops





