கோவை: சித்தாபுதூர் – பாப்பநாயக்கன்பாளையம் சாலையில் செயல்பட்டு வரும் தனியார் மதுபான பாரை உடனடியாக மூடக்கோரி, பொதுமக்கள் இரவு திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் மரக்கட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சிறுவன், அருகே உள்ள தனியார் பாரில் மது அருந்திவிட்டு போதையில் இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே, சித்தாபுதூர் – பாப்பநாயக்கன்பாளையம் சாலையில் செயல்பட்டு வரும் தனியார் பாருக்கு வரும் மதுப்பிரியர்களால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர்.
Also Read: கோவையில் காதலிக்க மறுத்ததால் ஆத்திரம்… பட்டாக்கத்தியுடன் சென்ற 19 வயது வாலிபர் கைது!
குறிப்பாக, பெண்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அச்சத்துடன் அந்தப் பகுதியை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளதாகவும், மதுப்பிரியர்களின் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், நேற்று இரவு அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தனியார் மதுபான பாரை முற்றுகையிட்டு, உடனடியாக பாரை மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறுகையில், “இந்த தனியார் பார் செயல்படுவதால் கொலை சம்பவங்கள் மட்டுமின்றி, திருட்டு, வழிப்பறி மற்றும் மதுப்பிரியர்களுக்கு இடையேயான தகராறுகளும் அடிக்கடி நடைபெறுகின்றன. இதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் வெளியில் நடமாடவே அச்சப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, பாரை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தினர்.
Also Read: மது அருந்த வராத நண்பன்… கோவையில் அதிர்ச்சி… வேலாண்டிபாளையத்தில் வழிப்பறி…
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காட்டூர் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும், தனியார் பாரை மூடுவது தொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் முறைப்படி மனு அளித்து உரிய நடவடிக்கை கோரலாம் என போலீசார் அறிவுறுத்தினர். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அமைதியாகக் கலைந்து சென்றனர்.
பொதுமக்களின் திடீர் போராட்டத்தால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.





