கோவை: இடையர்பாளையம் அருகே வீட்டில் தனியாக இருந்த 61 வயது மூதாட்டியின் முகத்தை தலையணையால் அமுக்கி, கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்க நகையை பறித்துச் சென்ற கல்லூரி மாணவரை போலீஸார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
கோவை இடையர்பாளையம் தேவாங்க நகரைச் சேர்ந்தவர் மகாதேவன். இவரது மனைவி பிரேமா (61). நேற்று இவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
அப்போது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர், அங்கிருந்த பொருட்களை நோட்டமிட்டுள்ளார். பின்னர் படுக்கையறையில் பிரேமா படுத்திருப்பதை பார்த்த அந்த நபர், திடீரென அவரது முகத்தில் தலையணையை வைத்து அமுக்கியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பிரேமா கூச்சலிட்டுள்ளார். அக்கம்பக்கத்தினர் வந்து விடுவார்கள் என அச்சமடைந்த அந்த நபர், பிரேமாவின் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்க நகையை பறித்துக்கொண்டு, தான் வந்த இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இதுகுறித்து பிரேமா கவுண்டம்பாளையம் போலீஸில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
மேலும், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அதில், நேற்று மாலை சுமார் 4 மணியளவில் வாலிபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்து, அதை நிறுத்திவிட்டு வீட்டுக்குள் செல்வதும், சிறிது நேரத்தில் வேகமாக வெளியே வந்து இருசக்கர வாகனத்தில் தப்பிச் செல்வதும் பதிவாகியிருந்தது.
சிசிடிவி காட்சிகள் மற்றும் போலீஸாரின் விசாரணையின் அடிப்படையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்டது வேலூரைச் சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவர் என்பது தெரியவந்தது. கோவையில் தங்கியிருந்து தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து அந்த மாணவரை போலீஸார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். நகை பறிப்பு சம்பவத்திற்கான காரணம் மற்றும் மாணவர் வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்தும் போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.





