கோவை: வானியல் மற்றும் விண்வெளி குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் கோவையில் அறிவியல் மாநாடு நடைபெற்றது.
கோவையில் இளைஞர் வானியல் மற்றும் விண்வெளி அறிவியல் மாநாடு கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. இதனை YASSC, TASS, IMS,IIA, TNSCST, AID India, ஒருங்கிணைத்து நடத்தினர்.

இந்த நிகழ்வில் கொடைக்கானல் Solar Observatory Deputy Head கிறிஸ்பின் கார்த்திக் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு இந்தியாவில் உள்ள தொலைநோக்கி ஆராய்ச்சி நிலையங்கள் பற்றியும் தற்போதைய நவீன தொலைநோக்கிகள் பற்றியும் அதன் மூலம் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் பற்றி மாணவர்களுக்கு விரிவாக எடுத்துரைத்தார்.

இந்த நிகழ்வில் ஒரு பகுதியாக தொலைநோக்கிகள் நேரடியாக கொண்டுவரப்பட்டு அதன் மூலம் சூரிய புள்ளிகள் பார்ப்பது மாணவர்களுக்கு தொலைநோக்கியை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் அதன் மூலம் வானியல் நிகழ்வுகளை கணக்கிட வேண்டும் என்பது பற்றி எடுத்துரைக்கப்பட்டது. மேலும் பல்வேறு இயற்பியல் கருவிகள் மூலம் செயல் விளக்கம் கொடுக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் 10 அடி உயர ராட்சத நிலா பலூன் வைக்கப்பட்டிருந்தது. நிலாவின் 360 டிகிரியும் கணக்கிடப்பட்டு அதில் எங்கெங்கு மேடு பள்ளங்கள் உள்ளது என துல்லியமாக அச்சிடப்பட்டிருந்தது. அதனை ஒருங்கிணைப்பாளர்கள் மாணவர்களுக்கு விரிவாக எடுத்துரைத்தனர்.

அங்கு வந்த கல்லூரி மாணவர்கள் தொலைநோக்கிகள், இயற்பியல் கருவிகள் அனைத்தையும் நேரடியாக அனுபவித்து வானியல் பற்றியும் இயற்பியல் பற்றியும் கற்றுக் கொண்டனர்.





