கோவை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட வாகன ஓட்டுனர்கள் நல சங்கத்தினர் அமைதி பேரணி மேற்கொண்டனர்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட சுற்றுலா வாகன ஓட்டுநர் சங்கத்தினர் கோவை வ உ சி மைதானத்தில் இருந்து தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் வரை சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கும் அமைதி பேரணியை மேற்கொண்டனர்.

OLA, UBER, RAPIDO தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் கால் டாக்ஸி ஓட்டுனர் பிரதிநிதிகள் அடங்கிய அமைதி குழுவை அமைக்க வேண்டும், மாவட்ட நிர்வாகம் Aggregator நிறுவனங்கள் மற்றும் கால் டாக்ஸி ஓட்டுநர்கள் ஆகியோரின் முத்தரப்பு பேச்சு வார்த்தையை நடத்த வேண்டும்,
நியாயமான பயண கட்டணம் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், மாவட்டத்திலேயே ஓட்டுநர்களுக்கான நேரடி அலுவலகம் அமைக்க வேண்டும், Booking செய்யும் போது கமிஷன் மற்றும் கட்டண விவரங்களில் வெளிப்படை தன்மையை உறுதி செய்ய வேண்டும்,
ஓட்டுநர்களின் குறைகளை கண்காணிப்பதற்கு மாவட்ட அளவிலான குழு ஒன்றை அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் இதில் வலியுறுத்தப்பட்டது.

வ உ சி மைதானத்தில் இருந்து தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் வரை சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஓட்டுனர்கள் அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பதாகைகளை ஏந்தி அமைதியான முறையில் பேரணி மேற்கொண்டனர்.
தங்களுக்கு பத்து கிலோ மீட்டருக்கு குறைந்தபட்சம் 300 ரூபாயாவது வரவேண்டும் என்றும் பல்வேறு தனியார் நிறுவன டாக்ஸிகள் குறைந்த கட்டணத்தில் இயங்குவதால் தங்களால் அதனை ஈடு செய்ய முடியவில்லை என்றும் விலைவாசி உயரும் பொழுது தங்களுடைய வருமானம் உயர்வதில்லை என்றும் குறைந்த கட்டணத்தில் வாகனங்களை இயக்கினால் வாகனத்தின் பராமரிப்பு செலவுகள் வட்டி கட்டுதல் ஆகியவற்றை மேற்கொள்ள முடிவதில்லை குடும்ப செலவுகளையும் பார்த்து கொள்ள முடிவதில்லை என்று கூறினர்.
அரசாங்கமே செயலி ஒன்றை கொண்டு வந்தால் இடைத்தரகர்கள் இருக்க மாட்டார்கள் என்றும் அவர்களுக்கு செல்லக்கூடிய பணத்தில் மக்கள் நலத்திட்டங்களையும் மேற்கொள்ளலாம் தங்களுக்கும் வாழ்வாதாரமாக இருக்கும் என்று குறிப்பிட்டனர்.
மேலும் பைக் டாக்ஸிகளையும் முறைப்படுத்த வேண்டும் என்றும் அவர்களுக்கு உரிய வாகன பதிவு எண் கொடுக்க வேண்டும் என்றனர்.





