கோவை: கோவை அருகே எட்டிமடை பகுதியில், ஓடும் ரயிலில் இருந்து பயணி ஒருவர் தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலத்தில் இருந்து திருச்சி நோக்கிச் சென்ற பயணிகள் ரயில், கோவை அருகே உள்ள எட்டிமடை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, அதில் பயணித்த நபர் ஒருவர் எதிர்பாராத விதமாக ரயிலில் இருந்து கீழே விழுந்துள்ளார்.
இந்த விபத்தில் அவரது தலை, கை மற்றும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. ரயில் பாதையின் அருகே காயங்களுடன் ஒருவர் கிடப்பதைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் சேவைக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள், காயமடைந்த நபருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வீடியோ
இதேபோல், கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை அருகே இருகூர் பகுதியில் ஓடும் ரயிலில் இருந்து பயணி ஒருவர் கீழே விழுந்து படுகாயம் அடைந்த சம்பவமும் நடைபெற்றது.
ரயிலின் படிக்கட்டுகளில் ஆபத்தான முறையில் அமர்ந்து பயணிப்பதே இதுபோன்ற விபத்துகளுக்கு முக்கிய காரணமாக இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே, ரயிலின் படிக்கட்டுகளில் அமர்ந்து ஆபத்தான முறையில் பயணம் செய்யும் பயணிகள் மீது ரயில்வே நிர்வாகமும், ரயில்வே காவல்துறையும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





