கோவை: சிங்காநல்லூர் உழவர் சந்தை விவசாயிகள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.
கோவை சிங்காநல்லூர் பகுதியில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. சிங்காநல்லூர் சுற்று வட்டார மக்கள் பலரும் இங்கு காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். அது மட்டுமின்றி பல்வேறு விவசாயிகளும் இங்கு வியாபாரம் செய்து வருகின்றனர்.
அதே சமயம் உழவர் சந்தைக்கு வெளியிலும் சில வியாபாரிகள் வியாபாரம் செய்து வரும் நிலையில் அவர்களால் உழவர் சந்தைக்கு உள்ளே இருக்கும் விவசாயிகள் தங்களுக்கு வியாபாரம் பாதிக்கப்படுவதாக கூறி தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன்படி இன்றும் விவசாயிகள் உழவர் சந்தை முன்பு அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வெளியில் கடை போடும் வியாபாரிகள் உரிய அனுமதி இன்றி கடைகளை போடுவதாகவும் இதனால் தங்களது வியாபாரம் பாதிக்கப்படுவதாகவும் கூறும் அவர்கள் அதே சமயம் கோவை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் மட்டுமே கோவையில் உள்ள உழவர் சந்தையில் வியாபாரம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.
மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக இதில் தலையிட்டு அனுமதியின்றி போடப்படும் கடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.




