கோவை: அடுத்த IPL தொடரில் CSK அணி வலுவான கம்பேக் கொடுக்கும் என கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அடுத்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி நிச்சயம் வலுவான மீள் வருகையை (கம்பேக்) கொடுக்கும் என்று அந்த அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கோவையில் உள்ள எஸ்.எஸ்.வி.எம் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மாணவர்களுடன் கலந்துரையாடிய அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சிஎஸ்கே அணியின் கேப்டனாகப் பொறுப்பு வகிப்பது என்பது தொடர்ந்து பல விஷயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு பயணமாகும். எம்.எஸ். தோனிக்குப் பிறகு அந்தப் பொறுப்பை ஏற்றிருப்பதால் எதிர்பார்ப்புகள் அதிகமாகவே உள்ளன. இருப்பினும், அந்த அழுத்தத்தை ஏற்றுக்கொண்டு பொறுப்பை ரசித்துச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறேன்.
எதிர்காலத்தைப் பற்றி அதிகம் யோசிக்காமல், ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு போட்டியையும் கவனத்தில் கொண்டு செயல்படுவதே எனது அணுகுமுறையாகும்.
கடந்த சீசனில் அணியின் செயல்பாடு ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கலாம்.
ஆனால், அடுத்த சீசனில் அணி நிச்சயம் வலுவாகத் திரும்பும். கடந்த 2008 முதல் சிஎஸ்கே அணியுடன் ரசிகர்கள் பல வெற்றிகளையும் சிறப்பான தருணங்களையும் கொண்டாடியுள்ளனர்.
அதேபோல அணியின் கடினமான காலகட்டங்களிலும் ரசிகர்கள் தங்களது ஆதரவைத் தொடர்ந்து அளிக்க வேண்டும்.
அடுத்த சீசனிலும் சிஎஸ்கே அணியில் தொடர்வது குறித்த கேள்விக்கு, ரசிகர்கள் என்ன விரும்புகிறார்களோ அதுவே எனது முடிவாக இருக்கும்.
மேலும், அணிக்கு அடுத்த சீசனில் தலைமைப் பயிற்சியாளர் நியமிக்கப்படுவார்; அதற்கான முடிவை எடுக்க இன்னும் போதுமான கால அவகாசம் உள்ளது. 13 வயதேயான இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் அபாரமான திறமை மிகவும் உற்சாகமளிக்கும் வகையில் உள்ளதாக ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்தார்.





