கோவை: காவலர் தினத்தையொட்டி
கோவை காவல் அருங்காட்சியகத்திற்கு அனுமதி இலவசம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவலர் தினம் வருகின்ற 6-ம் தேதியன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் கண்ணன் உத்தரவின்பேரில், கோவை மாநகரில் அமைந்துள்ள தமிழ்நாடு காவல் அருங்காட்சியகத்தை அன்றைய தினம் பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் அனைவரும் இலவசமாக பார்வையிட சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காவலர் தினத்தை பொதுமக்களுடன் இணைந்து சிறப்பாகக் கொண்டாடுவதோடு, பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையேயான நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் வகையிலும் இந்த சிறப்பு வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு காவல் அருங்காட்சியகம், காவல்துறையின் வரலாறு, சாதனைகள், பணிகள், உள்கட்டமைப்பு, அமைப்பு மற்றும் புலனாய்வு முறைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு காவல்துறையினர் பயன்படுத்திய ஆயுதங்கள், காவல் துறை சீருடைகள், தர அடையாளங்கள், பதக்கங்கள் மற்றும் காவல் துறை சின்னங்கள், பல்வேறு காலகட்டங்களில் பயன்படுத்தப்பட்ட காவல் உபகரணங்கள் மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், காவல் புகைப்படப் பிரிவில் பயன்படுத்தப்பட்ட புகைப்பட உபகரணங்கள், புலனாய்வுப் பிரிவில் பயன்படுத்தப்பட்ட ஒலி ஒளி பதிவு உபகரணங்கள் மற்றும் காவல் இசைக்குழுவினர் பயன்படுத்திய இசைக்கருவிகள் உள்ளிட்ட அரிய பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
காவல்துறையின் வரலாற்றை எடுத்துரைக்கும் வகையில், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., காவல்துறையின் சிறப்பான சேவையைப் பாராட்டி வழங்கப்பட்ட வாள், காவல் துறை நினைவு அஞ்சல் தலைகள், பல்வேறு பதக்கங்கள் மற்றும் காவல்துறை தர அடையாளங்களும் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.
அதேபோன்று, வீரப்பன் மற்றும் மலையூர் மம்பட்டியான் உள்ளிட்ட குற்றக் குழுக்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் உள்ளிட்ட பல்வேறு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆயுதங்களும் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், இந்திய ராணுவம் மற்றும் இந்திய கடற்படையில் பயன்படுத்தப்பட்ட டி.55 டேங்க், ரிகாயிலெஸ் துப்பாக்கி பல்வேறு ஏவுகணைகள் மற்றும் வெடிமருந்து மாதிரிகள் உள்ளிட்ட ராணுவ உபகரணங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
எனவே, கோவை மாநகர பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் அனைவரும் இந்த சிறப்பு வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டு, அருங்காட்சியகத்தை இலவசமாக பார்வையிட்டு பயன்பெறுமாறு கோவை மாநகர காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.





