கோவை: கோவையில் சீமைக்கருவேல மரங்களை அகற்றுவது குறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, அரசு நிலங்களில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை கண்டறிந்து அகற்றும் பணிகளை தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் தலைமையில் துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அரசு நிலங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளின் கட்டுப்பாடு மற்றும் பராமரிப்பில் உள்ள நிலங்களில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை கண்டறிந்து அகற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும், சீமைக்கருவேல மரங்கள் காணப்படும் தேசிய நெடுஞ்சாலைத்துறைமாநில நெடுஞ்சாலைத்துறை, இந்து சமய அறநிலையத்துறை, ரயில்வேத்துறை மற்றும் இதர அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ள நிலங்கள் ஆகியவற்றில் சீமைக்கருவேல மரங்களை முழுமையாக கண்டறிந்து,
உரிய நடைமுறைகளை பின்பற்றி அவற்றை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை குறித்தும், சம்பந்தப்பட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த ஒருங்கிணைப்பு அலுவலர்கள், தங்களது கட்டுப்பாட்டில் உள்ள அரசு நிலங்களில் சீமைக்கருவேல மரங்களின் நிலவரத்தை முறையாக கணக்கெடுத்து, அகற்றும் பணிகளை சம்பந்தப்பட்ட துறைகளுடன் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும் எனவும், பணிகளின் முன்னேற்றத்தை தொடர்ந்து கண்காணித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பட்டா நிலங்களில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களைக் கண்டறிந்து சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்களுக்கு சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் உரிய அறிவிப்பு (Notice) வழங்கி குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் சீமைக்கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணியில் சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, பணிகளை துரிதமாகவும், முறையாகவும் மேற்கொண்டு, நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் பணிகளை நிறைவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்ட இடங்களில், சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், இயற்கை சார்ந்த உள்நாட்டு மரக்கன்றுகள் நடப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.





