கோவை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் அதிகரிக்க முக்கிய காரணம் தற்போதைய போக்குவரத்து அமைச்சர் தான். அவர் பொறுப்பற்ற அமைச்சராக இருக்கிறார் என்று ஆமினி பேருந்து உரிமையாளர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.
கோவையில் அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் ஜெயம் பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன. கடந்த 2024-ம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில், எந்த ஊருக்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பது குறித்த கட்டண பட்டியலை அரசிடம் வழங்கியுள்ளோம். அந்த கட்டண அடிப்படையில்தான் நாங்கள் பேருந்துகளை இயக்கி வருகிறோம்.
தமிழகத்தில் ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கான முக்கியமான 3 சங்கங்கள் உள்ளன. ஒரு சில பேருந்துகளில் மட்டும் ரூ.5,000, ரூ.6,000 என அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுபோன்று அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகளை அரசு அதிகாரிகள் சிறைபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு நெருக்கடியான காலகட்டங்களிலும் நாங்கள் பேருந்து கட்டணத்தை உயர்த்தவில்லை.
ஆனால், கண்துடைப்புக்காக அபராதம் விதிக்கப் போவதாகக் கூறி, பிளாக்மெயில் செய்வது போன்று அதிகாரிகள் செயல்பட்டு அபராதம் விதிக்கின்றனர்.
இதற்கு முக்கிய காரணம் தற்போதைய போக்குவரத்து அமைச்சர் தான். அவர் எங்களுடன் இதுவரை முறையாக பேச்சுவார்த்தை நடத்தவில்லை. அமைச்சரின் நடவடிக்கைகள் சரியாக இல்லை. பொறுப்பற்ற அமைச்சராக இருக்கிறார்.
பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்ற நாட்களில் “ஆஃபர்” என்ற பெயரில் ஒரு ரூபாய்க்கு கூட டிக்கெட் விற்பனை செய்கின்றனர். சில நாட்களில் மிகவும் குறைந்த கட்டணத்தில் பேருந்துகளை இயக்குகின்றனர். போட்டிக்காக கட்டணத்தை குறைப்பதால், பொதுமக்களுக்கு உண்மையான நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் எது என்பது தெரியாமல் குழப்பம் ஏற்பட்டு, பின்னர் பிரச்சனை உருவாகிறது.
எனவே, அரசு ஒரு குறிப்பிட்ட நிலையான கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும். அரசு நிர்ணயிக்கும் கட்டணத்தின்படி ஆம்னி பேருந்துகளை இயக்கத் தயாராக இருக்கிறோம்.
ஆம்னி பேருந்துகளுக்கான கட்டணத்தை அரசு நிர்ணயித்து வழங்க வேண்டும் என்றும், அரசு பேருந்துகளுக்கான கட்டண நிர்ணய முறையில் ஆம்னி பேருந்துகளையும் இயக்க தயார் என்று கூட தெரிவித்து விட்டோம். ஆனால், இதுவரை எங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை.
மேலும், 250-க்கும் மேற்பட்ட பர்மிட்கள் வழங்கப்படாமல் அதிகாரிகள் காலம் தாழ்த்தி வருகின்றனர். இவ்வாறு காலம் தாழ்த்துவது லஞ்சம் பெறுவதற்காகத்தான்.
பொறுப்பேற்றுள்ள அமைச்சர், பொதுமக்கள் தொடர்புடைய முக்கியமான துறையான போக்குவரத்துத் துறையில் மிகவும் ஆக்டிவாக செயல்பட வேண்டும். எங்களுடைய பிரச்சனைகளை அமைச்சரிடம் நேரடியாக தெரிவிக்க வேண்டும் என்றால், அவர் எங்களிடம் பேச தயாராக இல்லை.
கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் சுமார் 800 பர்மிட்கள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. தற்போது ஆன்லைன் மூலம் பர்மிட் வழங்கப்படும் என அரசு தெரிவிக்கிறது. ஆனால், அதிலும் அதிகாரிகள் காலதாமதம் செய்து வருகின்றனர்.
ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்றால், அதை ஆன்லைன் மூலமாகவே கண்டறிய முடியும். அல்லது ஒரு பேருந்து நிறுத்தத்திற்கு சென்று, அங்கு பயணிகளிடம் விசாரணை நடத்தி, அதிக கட்டணம் வசூலித்த பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கலாம்.
அதை விட்டுவிட்டு, கண்துடைப்புக்காகவும், விளம்பரத்திற்காகவும் அதிகாரிகள் ஆங்காங்கே சோதனை நடத்தி பொதுமக்களுக்கும், பயணிகளுக்கும் தொல்லை கொடுக்கின்றனர்.
கடந்த ஆட்சியில் நடைபெற்ற அதே விஷயங்கள்தான் தற்போதும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதிகாரிகள் பலரும் மாறாமல் உள்ளனர். ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை.
ஒவ்வொரு ஆண்டும் ஆம்னி பேருந்து கட்டணம் தொடர்பாக இதே பிரச்சனை எழுகிறது. எனவே, அரசு அனைத்து தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, இதற்கு ஒரு நிரந்தரமான முடிவை எடுக்க வேண்டும்.
அரசு கட்டணத்தை நிர்ணயித்துக் கொடுத்தால், அந்த கட்டணத்திலேயே நாங்கள் பேருந்துகளை இயக்கத் தயாராக இருக்கிறோம். அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட ஒரு ரூபாய் கூட அதிகமாக வசூலித்தாலும், அந்த பேருந்தை சிறைபிடித்து நடவடிக்கை எடுத்துக் கொள்ளலாம் இவ்வாறு அவர் கூறினார்.





