கோவை: கூடலூர் நகராட்சியில் தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் வகையில், தெருநாய்களை பிடித்து கருத்தடை சிகிச்சை மற்றும் வெறிநாய்க்கடி தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
கூடலூர் நகராட்சி பகுதிகளில் தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் தெருநாய்களை பிடித்து கருத்தடை மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நகராட்சி தலைவர் அறிவரசு அவர்களின் அறிவுரையின் பேரிலும், நகராட்சி தலைவர் கோபிநாத் அவர்கள் முன்னிலையிலும், நகராட்சி பகுதிகளில் சுற்றித்திரியும் தெருநாய்களை பாதுகாப்பான முறையில் பிடிக்கும் பணி நடைபெற்றது.
இதற்காக WVS NGO நிறுவனத்தின் மூலம் பயிற்சி பெற்ற பணியாளர்கள் மற்றும் தேவையான பாதுகாப்பு உபகரணங்களுடன் தெருநாய்கள் பிடிக்கப்பட்டு, கருத்தடை சிகிச்சை மேற்கொள்ளவும், வெறிநாய்க்கடி தடுப்பூசி (ARV) செலுத்தவும் அழைத்துச் செல்லப்பட்டன.

தெருநாய்களின் கட்டுப்பாடற்ற இனப்பெருக்கத்தை குறைப்பதுடன், பொதுமக்கள் மற்றும் நாய்களுக்கு இடையிலான மோதல்கள், நாய் கடி சம்பவங்கள் உள்ளிட்டவற்றை குறைக்கும் நோக்கத்திலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
கருத்தடை சிகிச்சை மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முடிந்த பின்னர், நாய்கள் உரிய முறையில் பராமரிக்கப்பட்டு, விதிமுறைகளின்படி அவை பிடிக்கப்பட்ட அதே பகுதிகளில் மீண்டும் விடப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நகராட்சி பகுதிகளில் தெருநாய்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், பொதுமக்களின் பாதுகாப்பையும் விலங்குகள் நலனையும் கருத்தில் கொண்டு தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





