கோவை : கோவை மதுக்கரை அருகே குட்டி யானையுடன் காட்டு யானைகள் ஆற்றில் இறங்கி குளித்து மகிழ்ந்த காட்சிகள் மற்றும் காயமடைந்த குட்டியை தாய் யானை பாசத்துடன் அரவணைத்து வனப்பகுதிக்குள் அழைத்துச் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கோவை மாவட்டம் மதுக்கரை மற்றும் அதன் சுற்றுவட்டார வனப்பகுதிகளில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் வனப்பகுதியில் உள்ள வனவிலங்குகள் தண்ணீர் மற்றும் உணவு தேடி நீர்நிலைகளை நோக்கி வரத் தொடங்கியுள்ளன.
இந்நிலையில், மதுக்கரை அருகே உள்ள புதுப்பதி கிராமப் பகுதியில் உள்ள ஆற்றுக்கு பிற்பகல் நேரத்தில் 3 காட்டு யானைகள் கொண்ட கூட்டம் வந்துள்ளது. இந்தக் கூட்டத்தில் ஒரு குட்டி யானையும் இருந்தது.
ஆற்றில் இறங்கிய யானைகள் முதலில் தண்ணீர் குடித்து தாகத்தைத் தீர்த்துக்கொண்டன. பின்னர் ஆற்றின் கரையோரம் இருந்த பசுமையான புல்வெளிகளில் மேய்ந்தபடி, தண்ணீரில் இறங்கி குளித்து மகிழ்ந்தன. குட்டி யானையும் ஆற்றில் இறங்கி உற்சாகமாக குளித்தது. குட்டி யானை பாதுகாப்பாக இருப்பதை மற்ற யானைகள் தொடர்ந்து கண்காணித்தபடி இருந்தன.
சிறிது நேரம் ஆற்றில் குளித்த பின்னர், யானைக் கூட்டம் கரையேறி சாலையை கடந்து வனப்பகுதியை நோக்கி செல்லத் தொடங்கியது. அப்போது குட்டி யானையின் முன்னங்காலில் காயம் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.
முன்னங்காலில் வீக்கம் மற்றும் காயத்துடன் இருந்த குட்டி யானை, வலி காரணமாக தள்ளாடியபடியும், உடலை ஒருபுறமாக சாய்த்தபடியும் மெதுவாக நடந்து சென்றது.
குட்டியின் நிலையை கவனித்த தாய் யானை, அதனை விட்டு விலகாமல் பாதுகாப்பாக அழைத்துச் சென்றது. சாலையைக் கடக்கும் போது குட்டியைச் சுற்றி பாதுகாப்பாக நின்றதுடன், தனது தும்பிக்கையால் குட்டியை அரவணைத்தபடி மெதுவாக வனப்பகுதியை நோக்கி அழைத்துச் சென்றது.
வீடியோ
அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் சென்ற சிலர், தாய் யானை காயமடைந்த குட்டியை அக்கறையுடன் அழைத்துச் சென்ற நெகிழ்ச்சியான காட்சியை தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தனர்.
தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. குட்டி யானையின் மீது தாய் யானை காட்டிய பாசமும், பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் அழைத்துச் சென்ற விதமும் பார்ப்பவர்களை நெகிழச் செய்துள்ளது.
இதற்கிடையில், குட்டி யானையின் முன்னங்காலில் ஏற்பட்டுள்ள காயத்தை வனத்துறையினர் கண்காணித்து, அதன் நிலையை உறுதி செய்ய வேண்டும் என வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேவைப்பட்டால் வனத்துறை கால்நடை மருத்துவக் குழுவினர் மூலம் குட்டி யானைக்கு உரிய சிகிச்சை மற்றும் மருத்துவ உதவிகளை வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மதுக்கரையில் காயமடைந்த குட்டி யானையை தாய் யானை பாசத்துடன் அழைத்துச் சென்ற காட்சி வைரல்.
Mother elephant protects injured calf near Madukkarai in Coimbatore





