கோவை: புரட்டாசி மாதத்தின் சனிக்கிழமைகளில் மட்டுமே அனுமதியளிக்கப்படும் தமிழகத்தின் மிக உயரமான பெருமாள் கோவிலான, பெருமாள் முடி யாத்திரை நாளை (செப்டம்பர் 19) துவங்குகிறது.
பாவங்களை போக்கும் புரட்டாசி
பாவங்களில் இருந்து விடுபட்டு, புண்ணியங்களை பெறுவதற்குரிய மாதம் தான் இந்த புரட்டாசி மாதம். குறிப்பாக, பெருமாள் வழிபாட்டிற்குரிய மிகவும் புனிதமான ஆன்மீக மாதங்களில் புரட்டாசி மாதம் முதன்மையானது. இந்த 2026ம் ஆண்டில் புரட்டாசி மாதம் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் துவங்கியுள்ளது. அக்டோபர் மாதம் 16ம் தேதி வரும் சனிக்கிழமையுடன் இந்த மாதம் முடிவடைகிறது. புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமை நாளை (செப்டம்பர் 19) வருகிறது.

பெருமாளுக்கு உகந்த புனித மாதமான புரட்டாசியில் வைணவ கோவில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடத்தப்படுவது வழக்கமாகும். இந்த மாதத்தில் பெருமாள் கோவில்களின் பக்தர்கள் குவிவார்கள். குறிப்பாக, திருமலை திருப்பதி ஏழுமலையானை வேண்டி, மாலை அணிந்து, திருப்பதிக்கு பாதயாத்திரையாக் சென்று வழிபாடு நடத்துவார்கள். புரட்டாசி சனிக்கிழமைகளில் பக்தர்கள் விரதம் இருந்து பெருமாளை வழிபடுவார்கள்.
விரதம்
புரட்டாசி மாதத்தில் அதிகாலையில் எழுந்து, குளியல் போட்டு, வீட்டை சுத்தம் செய்விட்டு, பூஜை அறையில் விளக்கேற்றி பெருமாளை வழிபடுவார்கள் பெருமாளுக்கு உகந்த துளசி மற்றும் மலர்களை தூவி அர்ச்சனை செய்து, விஷ்ணு நாமங்களைக் கூறி வழிபாடு நடத்த வேண்டும்.

இந்த மாதத்தில் வரும் அனைத்து சனிக்கிழமைகளும் மிகவும் விஷேசமானதாகும். மாதம் முழுவதும் விரதம் இருக்க முடியாதவர்கள், சனிக்கிழமைகளில் மட்டும் விரதத்தை கடைபிடிக்கலாம். இந்த விரத காலகட்டத்தின் போது, அசைவ உணவுகளைத் தவிர்த்து சிலர் முழு நாள் விரதமும், ஒரு சிலரோ ஒருவேளை உணவும், இன்னும் சிலரோ எளிமையான சைவ உணவுகளை எடுத்துக் கொள்வார்கள். அவரவர் உடல்நிலை மற்றும் குடும்ப வழக்கத்திற்கு ஏற்றாற் போல விரத முறையைத் தேர்வு செய்து கொள்வது மிகவும் சிறந்தது.
இந்த மாதத்தில் தயாரிக்கப்படும் உணவுகளில் வெங்காயம் மற்றும் பூண்டு ஆகியவற்றை தவிர்த்து எளிமையான உணவுகளை சமைப்பதும் பெரும்பாலான குடும்பங்களின் பாரம்பரிய வழக்கமாகும். விரதம் என்பது உணவை மட்டும் தவிர்ப்பது அல்ல. மனதில் உள்ள எண்ணங்களிலும் செயல்களிலும் கட்டுப்பாட்டை கொண்டு வருவதே ஆகும்.
சனிக்கிழமை
இந்த புரட்டாசி சனிக்கிழமைகளில் ஏதேனும் ஒருநாளில் சிலர் திருப்பக்கு சென்று, ஏழுமலையானை தரிசனம் செய்து விட்டு, காணிக்கை செலுத்துவது வழக்கம். அதேபோல, இந்த மாதத்தில் ஒவ்வொரு சனிக்கிழமையும் சிவாலயங்களுக்கு சென்று சனி பகவானை வழிபட்டால், சனி தோஷம் விலகும். சூரிய பகவானின் இச்சா சக்தியான உஷா தேவியின் புத்திரனாக தோன்றியவர் சனீஸ்வரன். இதனால், புரட்டாசி சனிக்கிழமை வழிபாட்டுக்கு மிகவும் உகந்தது.
மேலும், சனிபகவானால் ஏற்படும் கெடுபலன்களில் காக்கும் கடவுளான பெருமாளை வணங்குவது வழக்கத்தில் இருந்து வருகிறது. இந்த நாட்களில் பெருமாளை வணங்கினால் அனைத்துவிதமான கஷ்டங்களும் நீங்கி, வளமான வாழ்வு கிடைக்கும் என்பது இந்து மதத்தின் நம்பிக்கையாகும்.
உயரமான பெருமாள் கோவில்
இந்தியாவில் ஆன்மீகப் பயணம் மேற்கொள்ளும் மலைப் பிரதேசமாக இமயமலை இருந்து வருகிறது. இங்கு ரஜினி முதல் பிரதமர் மோடி வரையில் ஆன்மீகப் பயண மேற்கொண்டுள்ளனர். அந்த வகையில், தமிழகத்திலும் ஓர் ஆன்மீகப் பயணம் செல்லும் முக்கிய பகுதி ஒன்று உள்ளது. இது பெரும்பாலானோர் அறிந்திடாத இடமாகும்.

கடல் மட்டத்தில் இருந்து 5,300 அடி உயரத்தில் பிரமிக்க வைக்கும் மலையாக எழுந்து நிற்கும் பெருமாள் முடி கோவில் தான். இந்த மலைக்கு ஆனைகட்டிக்கு அருகே உள்ள மாங்கரை சோதனை சாவடியை அடுத்து 4 கிலோ மீட்டர் தொலைவில் சேம்புக்கரை மலை கிராமத்தின் வழியாக செல்லலாம்.
இங்கு வழக்கமான நாட்களில் பக்தர்கள் சென்று தரிசனம் செய்ய அனுமதியில்லை. புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் மட்டுமே பக்தர்களின் தரிசனத்திற்கு வனத்துறை அனுமதியளிக்கிறது. பசுமை படர்ந்த மலைப்பகுதியின் வழியாக சென்று சுயம்பு வடிவில் அருள் பாலிக்கும் பெருமாளைக் காண, ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆண்டுதோறும் வருகை தருகின்றனர்.
சுயம்பு
கரடு முரடணான பாதைகளை கடந்து மலை உச்சியை அடைந்தால், அங்குள்ள மிகப்பெரிய பாறையின் இடையே ஒரு அறை போன்ற பகுதியில் தான் பெருமாள் அருள் பாலிக்கிறார். அங்கு பெருமாளை தரிசனம் செய்த பிறகு, பாறையை சுற்றி வந்து, மலையை விட்டு இறங்கலாம். மலையின் உச்சியில் பனிமூட்டமும், மழைப்பொழிவும் இருந்து கொண்டே இருப்பது பக்தர்களுக்கு பிடித்த காலநிலையாக இருக்கும்.

பெருமாள் முடியில் இருந்து கோவை நகரையும், வெள்ளிங்கிரி மலை, ஈஷா யோக மையம், ஊட்டி மலைத் தொடர் ஆகியவற்றை காணலாம்.
5 நாட்களே
நாளை புரட்டாசியின் முதல் சனிக்கிழமை என்பதால், பெருவாரியான பக்தர்கள் பெருமாள் முடிக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீங்கள் கோவை அல்லது கோவையை சுற்றியுள்ள மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருந்தால், ஆண்டுக்கு வெறும் 5 நாட்களே அனுமதிக்கப்படும், பெருமாள் முடிக்கு ஒருமுறையாவது சென்று தரிசனம் செய்து பாருங்கள். பலன் ஏராளம்.




