கோவை: குரூப் 1 தேர்வு இன்று நடைபெறும் நிலையில், தேர்வர்கள் மழையில் நனைந்தபடியே தேர்வு மையம் வந்தனர்.
உதவி ஆட்சியர், டி.எஸ்.பி, ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர், வணிக வரி உதவி ஆணையர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்ய டி.என்.பி.எஸ்.சி குரூப் 1, குரூப் 1 ஏ தேர்வை இன்று நடத்துகிறது.
காலியாக உள்ள 70 பணியிடங்களை நிரப்புவதற்கான இந்த முதல்நிலைத் தேர்வை எழுத தமிழகம் முழுவதும் 2 லட்சத்து 49 ஆயிரத்து 296 பேர் விண்ணப்பித்துள்ளனர். கோவையைப் பொறுத்தவரை 12,997 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர்.
Advertisement

கோவையில் 41 மையங்களில் தேர்வு நடைபெற உள்ள நிலையில், 987 பேர் கண்காணிப்பு பணிக்காக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இன்று அதிகாலை முதலே கோவையின் பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்து வரும் நிலையில், தேர்வு மையங்களுக்குச் செல்வோர், கனவுகளைச் சுமந்துகொண்டு, மழையில் நனைந்தபடியே தேர்வு மையத்தை அடைந்தனர். தேர்வு மையங்களில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஹால் டிக்கெட், அடையாள அட்டையை பரிசோதித்த பிறகே தேர்வர்களை, தேர்வு மையத்திற்குள் அனுமதித்து வருகின்றனர்.
தேர்வு மையத்திற்கு வருவோர், அடையாள அட்டை, ஹால் டிக்கெட் வைத்திருக்க வேண்டும். தடை செய்யப்பட்ட பொருட்களை தேர்வு மையத்திற்குள் கொண்டு சென்று பிடிபட்டால், தேர்வு எழுதுபவரின் விடைத்தாள் செல்லாது என்று ஏற்கனவே டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.