கோவை: சுற்றுச்சூழலை அழிக்கின்ற பொழுது இயற்கை நம்மையும் அழித்துவிடும் என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவர் தெரிவித்துள்ளார்…
Advertisement

கோவையில் பேரூர் ஆதீன மடத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா மற்றும் 24-வது பேரூர் ஆதீனம் சாந்தலிங்க ராமசாமி அடிகளாரின் நூற்றாண்டு விழா நடைபெற்றது.
இந்த நூற்றாண்டு விழாவில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி, பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு முன்னதாக பேரூர் ஆதீனம் மருதாச்சல அடிகளார் சிரவை ஆதீனம் ஆகியோரால் சிவ வேள்வி பூஜை நடைபெற்றது.
இந்த நிகழ்வில் சிறப்புரையாற்றிய மோகன் பகவத் இந்த விழாவில் கலந்து கொண்டது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார். இந்த உலகம் காலப்போக்கில் தர்மத்தை மறந்து விட்டதாகவும் நமது கடமை தர்மத்தை நினைவூட்டுவதாகும் என தெரிவித்தார். தாய் மொழிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் கூறிய அவர் மொழி இழப்பு என்பது நம்முடைய கலாச்சார இழப்பு என்றார். மேலும் உள்நாட்டு விவசாய உற்பத்தியை நாம் ஊக்குவிக்க வேண்டும் நம் நாட்டில் உற்பத்தி செய்வதை வாங்க வேண்டும் என தெரிவித்தார். சுற்றுச்சூழலை அழிக்கின்ற பொழுது இயற்கை நம்மையும் அழித்து விடும் என்றும் நீரை சேமிக்க வேண்டும் பிளாஸ்டிக் முடிந்தவரை தவிர்க்க வேண்டும் அழிவிற்கு முன்பு நாம் பல்வேறு முன்னெடுப்புகளை நாம் முன்னெடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும் இந்த நிகழ்வில் பிரம்மதேவர் பிரபஞ்சம் தர்மம் ஆகியவை குறித்தும் பேசினார்.
தொடர்ந்து பேசிய பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், நம் முன்னோர்கள் ஐந்து கொள்கைகளை வழங்கி உள்ளார்கள் என்று தெரிவித்தார். நம் உள் ஏற்றத்தாழ்வு இல்லை அனைவரும் ஒன்று என்பது நம்முடைய பண்பாடு என்றார். இந்திய கலாச்சாரத்தை பாதுகாப்பது தாய்மொழி காப்பது என நம் முன்னோர்கள் பெரும் தொண்டு ஆற்றினார்கள். தமிழ் வழி கல்வி, தமிழில் அர்ச்சனை ஆகியவை பேரூர் ஆதீனங்களால் முன்னெடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். தற்பொழுது கூட்டுக் குடும்பங்கள் சிதைந்து விட்டதாகவும் இதனால் நம்முடைய பண்பாடு சிதைவதாகவும் கூறினார். சமுதாயத்திற்கு என்ன செய்கிறோம் என்பது நம்முடைய பாரம்பரியம் கூறினார். போர் ஆகியவற்றில் இருந்து மீள்வதற்கு ஆன்மீக மிகவும் முக்கியம், என்றும் இந்த சமுதாயத்தில் சைவம் சமயம் தொண்டு ஆகியவை சிறந்து இருக்க அனைவரும் சேர்ந்து இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத்துக்கு முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணியின் சகோதரர் எஸ் பி அன்பரசன் வெள்ளி வேல் வழங்கினார்.