கோவை: கோவை குற்றாலம் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறை தடை விதித்துள்ளது.
கோவை மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தளங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது கோவை குற்றாலம். மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள இந்த சுற்றுலாத்தலத்திற்கு, உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்து அருவியில் குளித்து மகிழ்கின்றனர்.
வெள்ளப்பெருக்கு காரணமாக கடந்த மே மாதம் 23ம் தேதி மூடப்பட்ட கோவை குற்றாலம், கடந்த 11ம் தேதி தான் திறக்கப்பட்டது.
இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால், தற்போது மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மறு அறிவிப்பு வரும் வரை கோவை குற்றாலம் அருவிக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிப்பதாக வனத்துறை அறிவித்துள்ளது.