கோவை: துணை ஜனாதிபதி பொறுப்பை அனைவரும் சேர்ந்து கொடுத்தால் சிறப்பாக இருக்கும் என்றும் நம்மூர்காரருடன் போட்டி ஏற்பட வேண்டாம் என்றும் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
கோவை சூலூர் பகுதியில் உள்ள கலைஞர் தொழில்நுட்ப கல்லூரியில்(தனியார்) இளநிலை மற்றும் முதுகலை முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் இஸ்ரோ தலைவர், மயில்சாமி அண்ணாதுரை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மயில்சாமி அண்ணாதுரை, தற்பொழுது உள்ள மாணவர்களுக்கு பொறியியல் துறையில் அதிக வாய்ப்புகள் பெருகி வருவதாகவும் ஐடி துறையை மாணவர்கள் பலரும் விரும்பினாலும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறைகளையும் பல்வேறு மாணவர்கள் எடுத்து படிப்பதாக தெரிவித்தார். ஏ ஐ உள்ளிட்ட துறைகளை நோக்கி தற்போது சென்று கொண்டிருப்பதாக தெரிவித்த அவர் அதே சமயம் அத்துறையை உயர்வு படுத்தப் போகிறவர்கள் பொறியியல் மாணவர்கள் என குறிப்பிட்டார்.
குலசேகரப்பட்டினத்தில் அமைய உள்ள செயற்கைக்கோள் ஏவு தளம், செமிகண்டக்டர் ஆய்வகங்கள் ஆகியவைகளும் படிப்பதற்கு இருப்பதாகவும், மாற்று எரிசக்தி ஆகியவற்றிகான தேவைகளும் இருப்பதாக தெரிவித்த அவர் இதனை துறைகளில் வாய்ப்புகள் இருக்கும் பொழுது அதனை புரிந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.
பாதுகாப்பு துறையில் Drone, Surveillance, Logistics இது போன்ற பல்வேறு தேவைகள் இருப்பதாகவும் மாணவர்கள் படைகளில் சேராவிட்டாலும் மாணவர்கள் இந்த தேவைகளை பூர்த்தி செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்தார். மேலும் விண்வெளி சார்ந்தும் விவசாயத்திலும் பல்வேறு கண்டுபிடிப்புகளைகண்டுபிடிக்க வேண்டிய அவசியம் உள்ளதாக தெரிவித்தார். தற்பொழுது தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகள் போதுமானதாக உள்ளதாகவும் பொறியியல் மாணவர்களின் எண்ணிக்கையை பார்க்கும் போது அமெரிக்காவில் பொறியியலாளர்களை உருவாக்கும் அளவிற்கு தமிழ்நாட்டில் கல்லூரிகள் இருப்பதாகவும் ஆனால் அந்தத் தரத்திற்கு நம்முடைய மாணவர்கள் வர வேண்டும் என தெரிவித்தார்.
N1 Super Heavy Rocket குறித்தான கேள்விக்கு பதில் அளித்த அவர், மனிதனை நிலவுக்கு அழைத்துச் சென்று மீண்டும் அழைத்து வருவது, இந்தியாவிற்கான சர்வதேச விண்வெளி மையத்தை நிறுவுவதற்கான கட்டுமானங்களை கொண்டு செல்வது போன்ற வகையில் இந்த ராக்கெட் மிகவும் தேவையான ஒன்றாக இருக்கும் என தெரிவித்தார். மேலும் பெரிய கலன்களை தக்க வைக்க வேண்டிய சூழலும் தற்பொழுது ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.
நீர்மூலம் மின்சாரம் தயாரிப்பது குறித்தான கேள்விக்கு பதில் அவர், நீரிலிருந்து ஹைட்ரஜனை குறைந்த செலவில் பிரித்தெடுக்க முடிந்தால் நிலக்கரி, சமையல் எரிவாயு போன்ற தீர்ந்துவிடும் எரி பொருட்களை காட்டிலும் இது சிறப்பாக இருக்கும் அதற்கான ஆய்வுகளும் சென்று கொண்டிருப்பதாக தெரிவித்தார். நிசார் செயற்கைக்கோள் குறித்தான கேள்விக்கு, பூமியை பற்றிய புரிந்துணர்வும் சிறப்பாக இருக்கும் மேலும் நிலநடுக்கத்தை முன்கூட்டியே துல்லியமாக கணிக்க முடியலாம் என்றார்.
இந்தியா கூட்டணி சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளர் பெயர் பரிந்துரை பட்டியலில் அவரது பெயரும் இருந்தது குறித்தான கேள்விக்கு, ஏதாவது பொறுப்பு கொடுக்கப்பட்டால் அதனை தட்டிக் கழிக்க வேண்டிய அவசியம் இல்லை, என்றும் இது போன்ற ஒரு பொறுப்பை அனைவரும் சேர்ந்து கொடுத்தால் சிறப்பாக இருக்கும் என்று அப்துல் கலாம் கூறியது போன்று தான் என குறிப்பிட்டார்.
நம் ஊரிலும் ஒருவர் இருக்கும் பொழுது போட்டி போட வேண்டிய அவசியம் இல்லை என்று தான் நான் எண்ணுவதாக தெரிவித்தார். என்னுடைய பெயரையும் பரிந்துரையில் எண்ணிப் பார்த்தார்கள் என்பதில் மகிழ்ச்சி அதே சமயம் நம்மூரை சேர்ந்தவர்களுடன் போட்டி ஏற்பட வேண்டாம் என்பதிலும் மகிழ்ச்சி என தெரிவித்தார். மேலும் இருக்கின்ற சூழ்நிலையை பார்க்க வேண்டும் என்றும் அப்படி பார்க்கும் பொழுது அனைத்தும் நல்லதற்கே நடந்தது என பதில் அளித்தார்.