கோவை: கோவையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை மாவட்டத்தில் 5 கிலோ கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலிசார் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இருவரை கைது செய்தனர்.
போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் காரமடை காவல் நிலைய காவல் துறையினர் கஞ்சா விற்பனைக்கு வைத்து இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல் துறையினர் மேட்டுப்பாளையம் மெயின் ரோடு, அருகில் சென்று சோதனை மேற்கொண்டனர்.
அப்போது கஞ்சாவை விற்பனைக்காக வைத்து இருந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பகபான் ஜெகதீஷ் பரிஹா (25) மற்றும் துபிச்சந்திர பதான் (22) ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சுமார் 5 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ, ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் எச்சரித்து உள்ளார்.


