கோவை: கைவினை கலைஞர் திட்டத்தில் மானியம் பெறுவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கலை மற்றும் கைவினைத் தொழிலில் ஈடுபட்டுள்ளோர்க்கு மேம்பட்ட பயிற்சி அளிக்கவும் மானியத்துடன் கூடிய பிணையமில்லாக் கடன் வழங்கவும் சந்தைப்படுத்தும் திறனை உயர்த்தவும் கைவினை கலைஞர் திட்டம் 2024-25 நிதியாண்டு முதல் தமிழக அரசு செயல்படுத்தி வருகின்றது.
இத்திட்டத்தின் கீழ் கட்டட வேலைகள், மரவேலைப்பாடுகள், பாரம்பரிய முறையில் ஜவுளி அச்சிடுதல் தோல் கைவினைப் பொருட்கள், காலணிகள் தயாரித்தல் மீன் வலை தயாரித்தல் & மலர் வேலைப்பாடுகள், மண்பாண்டங்கள், மூங்கில், பிரம்பு, சணல், பனை ஓலை வேலைப்பாடுகள் & நகை செய்தல், சிகையலங்காரம், அழகுக்கலை, துணி நெய்தல் துணிகளில் கலை வேலைப்பாடுகள், சுதை வேலைப்பாடுகள், பூட்டு தயாரித்தல், உலோக வேலைப்பாடுகள்,
பழங்குடியினரின் இயற்கை சேகரிப்புகள் கைவினைப் பொருட்கள் தையல் வேலை, கூடை முடைதல் கயிறு பாய் பின்னுதல், நுடைப்பான் செய்தல் சுடுமண் வேலைகள், பொம்மைகள் தயாரித்தல், படகுக் கட்டுமானம், பாசிமணி வேலைப்பாடுகள், துணி வெளுத்தல், தேய்த்தல், சிற்ப வேலைப்பாடுகள், கற்சிலை வடித்தல், ஓவியம் வரைதல், வண்ணம் பூசுதல், காண்ணாடி வேலைப்பாடுகள், பாரம்பரிய இசைக்கருவிகள் தயாரித்தல் உள்ளிட்ட பல்வகைக் கலை மற்றும் கைவினைத் தொழிலில் ஈடுபட்டுள்ளோர்க்கு தொழில்திறன் சார் மேம்பட்ட பயிற்சியுடன் அவர்கள் மேம்பட்ட தொழில் நுட்பத்துடன் கூடிய கருவிகள் கொண்டு தொழில்புரிய ரூ.3.00 இலட்சம் வரை பிணையமில்லாமல் மானியத்துடன் கூடிய கடனுதவி வங்கிகள் மூலம் வழங்கப்படுகின்றது.
கடன் தொகையில் 25% அதிக பட்சம் ரூ.50,000 மானியமாக வழங்கப்படும். கடனைத் திருப்பிச் செலுத்தும் காலத்தில் 5% வரை வட்டி மானியமும் வழங்கப்படும். அனைத்து அரசு மற்றும் தனியார் வணிக வங்கிகள், தாய்கோ வங்கி கூட்டுறவு வங்கி மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் இத்திட்டத்தின் கீழ் கடன் வழங்கத் தகுதி பெற்றவை. கைவினைஞர்களின் சந்தைப்படுத்தும் திறனை உயர்த்துவதற்கா ஆலோசனைகளும் வழிகாட்டுதல்களும் இத்திட்டத்தில் வழங்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்புவோர் 35 வயதுக்கு மேற்பட்டவராகவும் எந்த வகைத் தொழிலுக்காக கடனுதவி பெற விரும்புகிறாரோ அந்தத் தொழிலில் குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் முன்னனுபவம் கொண்டவராகவும் இருக்க வேண்டும். இத்திட்டத்தில் நாளது தேதி வரையில் 1505 விண்ணப்பங்கள் பெறப்பட்டு 1144 விண்ணப்பங்கள் வங்கிக்கு பரிந்துரைக்கப்பட்டதில் 522 விண்ணப்பங்கள் கடனுதவி ஒப்பளிப்புகள் பெறப்பட்டுள்ளன.
மேலும் 2025-26 ஆம் நிதியாண்டில் 398 பயனாளிகளுக்கு ரூ.19107 இலட்சம் மானியத் தொகையாக விடுவிக்கப்பட்டுள்ளது.
எனவே, கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்வமும், தேவையும் உள்ள கைவினைஞர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற www.msmeonlinetngov.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பங்களைப் பதிவு செய்யலாம் விண்ணப்பிக்க தனி நபரின் புகைப்படம் ஆதார் அட்டை தொழில் அனுபவத்தை உறுதி செய்ய தொழிலாளர் நலவாரியம் வழங்கிய அடையாள அட்டை அல்லது சுய சான்றிதழ், திட்ட அறிக்கை இவை மட்டுமே போதுமானவை சுய சான்றிதழ் மாதிரிப் படிவம் மற்றும் மாதிரி திட்ட அறிக்கை மேற்கண்ட இணையதளம் வழியே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும், திட்டம் குறித்த மேலான தகவல்களைப் பெறவும் விண்ணப்பம் பதிவு செய்வது தொடர்பான ஆலோசனைகள் வழிகாட்டுதல் பெறவும் பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், 2. ராஜ வீதி, கோயம்புத்தூர் அலுவலகத்தை நேரடியாகவோ அல்லது 0422-2391678 0422-2397311 மற்றும் 89255333934,35 9443565891 ஆகிய எண்கள் வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.


