கோவை: கோவையில் அரசு பேருந்து பணிமனையை ஓட்டுநர்கள், நடத்துனர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை சுங்கம் பகுதியில் உள்ள அரசு பேருந்து பணிமனையை முற்றுகையிட்டு ஓட்டுநர்கள், நடத்துனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையில் ஓட்டுநர்கள், நடத்துனர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஊதிய உயர்வு செய்யபட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தற்காலிக ஓட்டுநர்கள், நடத்துனர்கள் கோவை சுங்கம் பேருந்து பணிமனையை முற்றுகையிட்டும், போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 4 ஆண்டுகளாக தற்காலிக ஓட்டுநர்களாகவே பணியாற்றி வருவதாகவும் நேற்று காந்திபுரத்தில் இருந்து குப்பனூர் நோக்கி பேருந்து எடுத்துச் சென்ற போது திடிரென பிரேக் டவுன் ஆனது. இது குறித்து உதவி பொறியாளரிடம் கூறிய போது நிரந்தர பணியாளர் இல்லை, தற்காலிக ஊழியர் தான என அலட்சியமாக பதிலளித்ததாகவும் கூறிய அவர்கள் பிரேக் டவுன் ஆன தொலைவை கணக்கு செய்து சம்பளத்திலும் பிடித்தம் செய்வதாகவும் கூறினர்.
இதனை அரசு பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் இல்லை எனில் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.


