கோவை: சூலூர் அருகே பள்ளிப் பேருந்து ரிவர்ஸ் எடுத்தபோது ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த பட்டணம் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளிக்குச் சொந்தமான பேருந்து ஒன்று, இன்று வழக்கம்போல் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு பள்ளி நோக்கிச் சென்று கொண்டிருந்தது
நடுப்பாளையம் பகுதிக்கு வந்தபோது, சாலை மிகவும் குறுகலாக இருந்ததன் காரணமாக, பேருந்தை திருப்புவதற்காக ஓட்டுநர் வாகனத்தைப் பின்புறமாக (ரிவர்ஸ்) இயக்கியுள்ளார்
அப்போது எதிர்பாராத விதமாக, அதே பாதையில் பின்னால் வந்த ஆட்டோ ஒன்று, பள்ளிப் பேருந்து ரிவர்ஸ் எடுப்பதைக் கவனிக்காமல் அதன் அருகே சென்றுள்ளது. கண்ணிமைக்கும் நேரத்தில் பள்ளிப் பேருந்து ஆட்டோவின் மீது பலமாக மோதியது. இதில் நிலைதடுமாறிய ஆட்டோ ஓட்டுநர், ஆபத்தை உணர்ந்து உடனடியாக வாகனத்தில் இருந்து வெளியே குதித்ததால் அதிர்ஷ்டவசமாக எவ்வித காயமுமின்றி நல்வாய்ப்பாக உயிர் தப்பினார்.
இந்த விபத்தின்போது ஆட்டோவின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. பேருந்தில் இருந்த பள்ளி குழந்தைகளுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. சுற்றுவட்டாரப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விபத்து குறித்த கண்காணிப்பு கேமரா (CCTV) காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக வைரலாகி வருகிறது.


