கோவை: பள்ளியில் கழிப்பறைக்குச் சென்ற மாணவனை பாம்பு கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொள்ளாச்சி அருகே உள்ள புரவிபாளையத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கே ஏராளமான மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் வடக்கிபாளையத்தைச் சேர்ந்த மாணவர் 11ம் வகுப்பு படித்து வருகிறார்.
சம்பவத்தன்று வகுப்புகள் முடிந்து இயற்கை உபாதை கழிப்பதற்காக மாணவர்கள் அங்கு உள்ள கழிப்பறைக்குச் சென்றனர். அப்போது கழிப்பிடம் அருகே மாணவர்கள் சிறுநீர் கழித்த போது, அங்கு புதருக்குள் இருந்த பாம்பு 11ம் வகுப்பு மாணவனின் வலது காலில் கடித்தது.
இதனால் அந்த மாணவர் சத்தமிட்டு கதறினார். மாணவனின் அலறல் சத்தத்தை கேட்டு அங்கு வந்த சக மாணவர்கள், ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக பொள்ளாச்சி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நல்வாய்ப்பாக மாணவருக்கு வேறு பாதிப்பு ஏற்படவில்லை. அவர் நலமுடன் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையே அரசுப் பள்ளியில் கழிப்பிடம் அருகே மாணவனுக்கு பாம்பு கடித்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். உடனடியாக அந்த பகுதியில் உள்ள முட்புதர்களை அகற்றும்படி உத்தரவிட்டுள்ளனர்.
மேலும், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கழிப்பிடம் மற்றும் சுற்றுப்புறங்களை சுகாதாரமாகவும், பாதுகாப்பாகவும் வைத்திருக்க வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கோவை செய்திகள், அரசு, ரயில்வே மற்றும் மின்தடை அறிவிப்புகளுக்கு எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவில் இணைவீர் 👈
அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளிலும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். சுகாதாரமற்ற பள்ளிகள் குறித்து உடனே மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு புகார் அளிக்க வாசகர்களிடம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.