கோவை: கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் இரண்டாவது நாளாக ஆசிரியர்கள் போராட்டம் தொடர்ந்து வருகிறது.
கோவையில் உதவி பேராசிரியர்கள் இணை பேராசிரியர்கள் இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் தற்பொழுது இதில் தமிழகத்தில் உள்ள அனைத்து பேராசிரியர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இணை பேராசிரியர்கள் உதவி பேராசிரியர்கள் நேற்று முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆசிரியர் பணி, ஆராய்ச்சி பணி, வேளாண் விரிவாக்க பணி, பல்கலைக்கழகத்திற்கான வளர்ச்சிப் பணிகள் ஆகிய நான்கை அடிப்படையாகக் கொண்டு பதவி உயர்வு கடந்த காலங்களில் வழங்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் தற்பொழுது ஆராய்ச்சி கட்டுரைகளை மட்டுமே மையமாக வைத்து பதவி உயர்வு வழங்கப்பட்டதாகவும் இதனால் சுமார் 250க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பதவி உயர்வு பாதிக்கப்படுவதாக தெரிவித்து போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்று கோவையில் உள்ள இணை பேராசிரியர்கள் உதவி பேராசிரியர்கள் மட்டும் போராட்டம் மேற்கொண்ட நிலையில் இரண்டாவது நாளான இன்று தமிழகம் முழுவதும் உள்ள ஆராய்ச்சி நிலையங்கள் மற்றும் கல்லூரிகளை சார்ந்த 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் துணைவேந்தர் அலுவலக வளாகம் முன்பு அமர்ந்து அமைதியான வழியில் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள அனைவரும் கருப்பு பேட்ச் அணிந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். உயர் மட்ட குழு கூட்டம் நடத்தி கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் ஆனால் அதற்கு குறிப்பிட்ட நாட்கள் ஆகும் என உயர்மட்ட குழுவினர் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்ட ஆசிரியர்கள் உடனடியாக அதனை செயல்படுத்த வேண்டும் என்றும் அதுவரை போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்துள்ளனர்.