கோவை: கரூர் தவெக விவகாரம் தொடர்பான கேள்விகளை தற்போது தவிர்க்கலாம் என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
திமுக கோவை மாநகர் மாவட்ட பொறுப்பாளராக புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள செந்தமிழ் செல்வன் என்று பொறுப்பேற்கிறார். அதனை முன்னிட்டு காந்திபுரம் பேருந்து நிலையம் அருகில், பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் புகைப்படங்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, பொங்கலூர் பழனிச்சாமி உட்பட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்வில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த செந்தில் பாலாஜி, செந்தமிழ்ச்செல்வன் முறைப்படி அவரது பொறுப்பை ஏற்கிறார். 2026 ஆம் ஆண்டு எங்கள் வேட்பாளர்களை வெற்றியடைய செய்ய வேண்டும் அதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என தெரிவித்தார்.
கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றி கழக பிரச்சார விவகாரம் குறித்தான கேள்விக்கு அது பற்றி ஏற்கனவே விரிவாக பேசி விட்டேன், விசாரணை ஆணையத்தின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது எனவே விசாரணை முடிந்த பிறகு அதைப் பற்றி பேசினால் சரியாக இருக்கும் எனவே அது சம்பந்தமான கேள்விகளை தற்போதைக்கு தவிர்க்கலாம் என தெரிவித்தார்.
அந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு புதிய வீடியோக்கள் வருவது தொடர்பான கேள்விக்கு, எந்தெந்த வீடியோக்கள் வெளியாகிறதோ அவை அனைத்தும் விசாரணை ஆணையத்தால் விசாரிக்கப்படும் என்று பதிலளித்தார். தமிழக அரசு இதனை வைத்து அரசியல் செய்வதாக சில குற்றச்சாட்டுகள் எழுந்து வருவது குறித்தான கேள்விக்கு பதில் அளித்த அவர், ஏற்கனவே அரசின் சார்பில் முழு விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளது என்றும் மாவட்டத்தில் நடந்த நிகழ்வுகள் குறித்து கரூரிலிருந்து நான் முழு விளக்கங்களை தெரிவித்துள்ளதாகவும் கூறிய அவர், விசாரணை ஆணையத்தின் விசாரணை முடிந்து இறுதி அறிக்கையில் என்ன வருகிறதோ அதனை பார்த்து அது பற்றி பேசுவோம் என பதிலளித்தார்.
அரசின் மீது கேட்கப்படும் கேள்விகளை இன்னொரு பக்கம் செய்தியாளர்கள் கேட்பதில்லை என்றும் யாரிடம் கேட்க வேண்டிய கேள்விகளை யாரிடம் கேட்கிறோம் என்று செய்தியாளர்கள் நீங்களே சுய பரிசோதனை செய்யுங்கள் என்று கூறினர். ஏன் ஏழு மணி நேரம் தாமதமாக வந்தீர்கள்? ஏன் 500 மீட்டருக்கு முன்பாகவே வண்டிக்குள் சென்று விட்டீர்கள்? ஏன் 12 மணிக்கு என்று அறிவித்துவிட்டு ஏழு மணிக்கு வந்தீர்கள்? டிசம்பர் மாதம் திட்டமிட்டு இருந்த பிரச்சாரம் ஏன் முன்கூட்டியே வந்தது? என்று கேட்டிருக்க வேண்டும் என கூறினார்.
இருக்கின்ற சூழலை எடுத்துக் கூறுகின்ற கடமை நமக்கு உள்ளது அந்த பொறுப்பும் நம்மிடம் உள்ளது. என்னிடம் ஒரு கேள்வி கேட்டால் எதிர் புறத்திலும் ஒரு கேள்வி கேட்க வேண்டும் அல்லவா? என்றார். கரூர் விவகாரம் தொடர்பாக தற்பொழுது எந்த கேள்விகளும் வேண்டாம் விசாரணை முடிந்து அறிக்கை வந்த பிறகு மீண்டும் பேசுவோம் என பதில் அளித்துச் சென்றார்.