ஆடி மாதம் எப்போதுமே அம்மனுக்கு மிகவும் உகந்த விரத நாட்களாகும். இந்த மாதங்களில் வரும் வெள்ளிக்கிழமைகளில் அதிகாலை விரதம் இருந்து வழிபாடு நடத்தினால், நமக்கும், நமது குடும்பத்திற்கும் ஏற்பட்ட எப்படிபட்ட துன்பமும் தீர்ந்து போகும் என்பது ஐதீகமாகும். ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் மாலை நேரங்களில், கோவில்கள் மற்றும் வீடுகளில் அம்மனை பல்வேறு அலங்காரங்களில் அலங்கரித்து வழிபடுவது உண்டு.
ஆடி மாதத்தில் எத்தனையோ சிறப்பான நாட்கள் இருந்தாலும், ஆடி வெள்ளிக்கு மட்டும் எப்போதுமே தனிச்சிறப்புகள் உண்டு. இந்த நாட்களில் விரதமிருந்து, அம்மனுக்கான மந்திரத்தை சொல்லி வழிபட்டால் பயன்கள் ஏராளம்.

ஆடி வெள்ளி
கடக மாதத்தில் சூரிய பகவான் பயணிக்கும் மாதம் தான் ஆடி மாதமாகும். பொதுவாக வெள்ளிக்கிழமைகளில் சுகபோக வாழ்க்கைக்கும், செல்வம் மற்றும் மகிழ்ச்சிக்கு காரணமாக சுக்கிரனின் ஆதிக்கம் நிறைந்த நாளாகும். ஆடி மாதத்தில் சந்திரனும், சுக்கிரனும் இணையும் நாளாக வெள்ளிக்கிழமை இருக்கும். இந்த சமயத்தில் பெண் தெய்வங்களின் சக்தி அபரிவிதமாக காணப்படும். இதன் காரணமாகவே ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாகும்.
ஆடி மாதத்தில் ஆடி செவ்வாய் மற்றும் ஆடி வெள்ளி அம்மனுக்கு உகந்த நாட்களாகும். குறிப்பாக, ஆடி வெள்ளி பெண்களுக்கு முக்கியமான நாளாகும். ஆடி மாதத்தில் வரும் 5 வெள்ளிக்கிழமைகளும் மிகவும் சிறப்பு வாய்ந்தது. 5 வெள்ளிக்கிழமைகளிலும் விரதம் இருக்க முடியாத பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் ஒரு வெள்ளிக்கிழமை விரதம் இருக்கலாம்.
விரத பலன்கள்
குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், திருமணம் தடையுள்ள பெண்கள் ஆடி வெள்ளிகளில் விரதம் இருக்கலாம். அதேபோல, நிம்மதியை தேடுபவர்கள், குடும்பத்தில் தீராத பிரச்சினை இருப்பவர்கள், செல்வம் தங்குவதற்கு, தீராத கடன் பிரச்சினை, அகலாத நோயால் பாதிக்கப்படுபவர்கள் ஆடி வெள்ளியில் விரதமர் இருந்து வழிபட்டால், நினைத்தது நடக்கும். ஏனெனில், கேட்ட வரத்தை கொடுக்கும் மகிமை ஆடி வெள்ளிக்கு உண்டு.
விரதம் இருப்பது எப்படி?
சூரியன் உதயமாவதற்கு முன்பே எழுந்து குளித்து விட்டு, வீட்டில் விளக்கு ஏற்ற வேண்டும். பின்னர், கோவிலுக்கு சென்று வேண்டுதலை வேண்டிக்கொண்டே விளக்கேற்றுவது மிகவும் சிறப்பானது. கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீடுகளிலேயே மகாலட்சுமியின் படத்தை வைத்து, அதன் முன் நெய் தீபம் ஏற்றி வழிபடலாம். அம்மன் படம் ஏதுமில்லையென்றால், தீபத்தையே அம்மனாக பாவித்து விளக்கேற்றி, பூக்களால் அர்ச்சனை செய்து வழிபடலாம். அம்மனை மனதார வேண்டிக்கொண்டு, காலையும், மதியமும் விரதம் இருந்தால் நல்ல பலனை அளிக்கும். முடியாதவர்கள்,காலை ஒரு வேளை மட்டும் சாப்பிடாமல் விரதம் இருக்கலாம்.

மந்திரங்கள்
லலிதா சகஸ்ரநாமம், மகாலட்சுமி அஷ்டகம், அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம்,சகலகலாவல்லி மாலை, லட்சுமி அஷ்டோத்திரம்,செளந்தர்யலஹரி, கனகதாரா ஸ்தோத்திரம் போன்ற அம்மனுக்குரிய பாடல்களை பாடி வழிபடலாம். பூக்களால் அர்ச்சனை செய்வதைவிட, இந்த மந்திரங்களாலும், ஸ்தோத்திரங்களாலும் அர்ச்சனை செய்து வழிபாடு செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
இறந்த சுமங்கலி வழிபாடு
ஆடி மாதத்தின் 3வது வெள்ளிக்கிழமையில், நமது வீட்டில் சுமங்கலியாக உயிரிழந்தவர்களின் படத்தை மகாலட்சுமியோடு வைத்து வழிபாடு நடத்துவது குடும்பத்திற்கு மிகவும் உகந்ததாகும்.
இது குறித்து பிரபல ஜோதிடர் கூறியதாவது; நாளை ஆடி 3வது வாரம் கால சர்ப்ப தோஷம் அமைப்பில் கிரக நிலைகள் இருக்கிறது.சந்திரன் கும்ப ராசியிலும், சந்திரன் ராகுவுடனும், சுக்கிரன் கேதுவுடனும் சேர்ந்து இருக்கிறார்கள். நிறைய ஜாதகங்களில் பெண் சாபம் இருப்பதாக சொல்வாங்க. அனைத்து குடும்பங்களிலும் பெண் சாபம் இருக்கத்தான் செய்யும். தலைமுறைகளை எடுத்தக் கொண்டால் பாவம் செய்யாத மனிதர்களே கிடையாது. அந்தப் பாவத்தின் தன்மை மட்டுமே மாறும்.
நம்மிடம் பல வழிபாடுகள் உள்ளன. இந்த வெள்ளிக்கிழமையில் (ஜூலை 31) மகாலட்சுமியுடன் சேர்த்து, சுமங்கலியாக இறந்தவர்களையும் வழிபாடு நடத்துங்க. ரொம்ப நல்லது. சந்திரன் ராகுவுடனும், சுக்கிரன் கேதுவுடனும் இருக்கிறார்கள். இரு பெண் கிரகங்களும் ராகு, கேதுவுடன் மாட்டிக் கொண்டிருக்கிறது.
காலையில் சுமங்கலியாக இறந்தவர்களின் போட்டோ இருந்தால், அதில் பூ வைத்து, விளக்கு ஏற்றி, அவங்களுக்கு பிடித்த உணவுகளை படையலிட்டு, வழிபாடு நடத்தினால் மிகவும் நல்லது. அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும்.
மகாலட்சுமி பூஜை செய்வது மிகவும் எளிது. கற்கண்டு சாதம் பண்ணி வழிபடுவது மிகவும் விஷேசமானது. அப்படியில்லையெனில், மகாலட்சுமிக்கு மிகவும் பிடித்தமான, அக்கார வடிசலை சமைத்து படையலிட்டு வழிபடலாம். அல்லது பால் பாயாசம் செய்து வழிபாடு நடத்தலாம். வெள்ளை நிறத்தில் செய்யப்படும் எந்த இனிப்பு வகைகளையும் தயார் செய்து படையலிடலாம்.
ஆடை நிறம்
9 அல்லது 18 அல்லது 27 என்ற எண்ணிக்கையில் தாமரைப்பூவை வைத்து வழிபடலாம். வெள்ளிக்கிழமை காலையில் இறந்த சுமங்கலிக்கும், மாலையில் மகாலட்சுமிக்கும் பூஜை செய்த வழிபட வேண்டும். அர்ச்சனைக்கு குட்டி குட்டியான வில்வ இலைகளால் மகாலட்சுமி மந்திரம் சொல்லி வழிபாடு நடத்த வேண்டும். லோட்டஸ் பிங்க் (Lotus Pink) அல்லது கத்தரிப்பு (லாவண்டர்) நிற ஆடைகளை அணிந்து வழிபடலாம். புத்துக்கு பால் தெளித்து வழிபடுவது மிகவும் விஷேசமானது. இவ்வாறு அவர் கூறினார்.




