கோவை: கோவை ரயில்களில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் வடமாநில தொழிலாளர்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கண்டு கொள்ளாத ரயில்வே அதிகாரிகளால் பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
கோவை ரயில் நிலையத்தில் இருந்து சென்னை, நெல்லை, மதுரை, நாகர்கோவில், சேலம், ஈரோடு உள்பட பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, டெல்லி, மும்பை உள்பட பல்வேறு மாநிலங்களுக்கும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் கோவை ரயில் நிலையத்தில் இருந்து பயணத்தை மேற்கொள்கின்றனர்.
இதனால் கோவை ரயில் நிலையம் எப்போதும் பரபரப்பாகவே காணப்படும். அதேபோல இங்கிருந்து தினமும் பயணிகள் ரயில் மற்றும் முன்பதிவு செய்யப்பட்ட ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது.
பெரும்பாலும் குடும்பத்துடன் செல்பவர்கள் ரயில்களில் முன்பதிவு செய்து பயணிக்கவே ஆர்வம் காட்டுகிறார்கள். இதனால் பண்டிகை மற்றும் பண்டிகை அல்லாத நாட்களுலும் கூட கோவையில் முன்பதிவுகள் அதிகமாக நடக்கிறது.
முன்பதிவு செய்யும் பயணிகள் ரயில் புறப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக வந்து தங்களுக்கு என ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் அமர்ந்து கொள்கிறார்கள்.
ஆனால் முன்பதிவு செய்யாத பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய ரயிலில் இடத்தை பிடிப்பதற்காக பல மணி நேரத்திற்கு முன்பாகவே வந்து விடுகிறார்கள்.
அவர்கள் ரயில் பிளாட்பாரத்திற்கு வந்ததும் போட்டி போட்டு கொண்டு ஏறி இருக்கையை பிடித்து கொள்கின்றனர். இவ்வாறு ஏறும் பயணிகள் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டி என தெரியாமல் அதில் ஏறி அமர்ந்து கொள்கிறார்கள்.
அப்போது அங்கு வரும் முன்பதிவு செய்த பயணிகள் அவர்களிடம் விளக்கி கூறி அமர வேண்டி உள்ளது.
சில நேரங்களில் அவர்களிடம் வாக்குவாதத்திலும் ஈடுபடுகின்றனர். சிலர் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் ஏறி இருக்கை இல்லாத போது தரையிலேயே அமர்ந்து கொள்வதும், படுத்தும் தூங்கி கொள்வதுமாக உள்ளனர்.
இதில் குறிப்பாக வடமாநிலத்தவர்களே அதிக அளவில் ரயில் பயணிகளுக்கு தொல்லை கொடுத்து வருகின்றனர்.
முன்பதிவு பெட்டிகளில் ஏறி நடந்து செல்லும் வழியில் அமருவதும், படுத்து தூங்குவதும், கழிப்பறை முன் அமர்ந்து கொள்வதும் வாடிக்கையாக வைத்துள்ளனர்.
இதனை டிக்கெட் பரிசோதகர்கள் கண்டு கொள்ளாமல் விட்டு விடுகின்றனர். இதனால் முன்பதிவு செய்து பயணம் செய்யும் பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.
இது தொடர் கதையாகவே இருந்து வருகிறது. கடந்த 15 தேதி கோவையில் இருந்து நாகர்கோவில் சென்ற ரயிலில் முன்பதிவு செய்யப்பட்ட எஸ்1 பெட்டில் கட்டுக்கடங்காத வடமாநில தொழிலாளர்கள் கூட்டம் ஏறியுள்ளது.
அவர்கள் வழக்கம் போல பயணிகளுக்கு இடையூறாக இருக்கையில் அமர்ந்தும், கழிப்பறைக்கு செல்ல வழி இல்லாமலும் மறைத்து நின்று கொண்டனர்.
அப்போது அந்த பெட்டியில் வந்த டிக்கெட் பரிசோதகர் அவர்களை கண்டு கொள்ளாமல் இருந்துள்ளார். இதனால் பயணிகள் முன்பதிவு செய்யாத டிக்கெட் வைத்துள்ள பயணிகளால் இடையூறாக இருப்பதாகவும், பெண்களால் கழிப்பறைக்கு செல்ல முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
அதற்கு அந்த டிக்கெட் பரிசோதகர் போலீசாரிடம் தெரிவிக்கிறேன் என கூறியுள்ளார். இதனால் பயணிகளுக்கும், டிக்கெட் பரிசோதகருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை அந்த ரயிலில் பயணம் செய்த ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். அது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதற்கு நிரந்தர தீர்வு காண ரயில் பயணிகள் ரயில்வே அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.






Comments are closed.