கோவை: கோவையில் வீடு புகுந்து 58 வயதான பெண் அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாநகர் பாப்பநாயக்கன்பாளையம் கருப்புக்கால் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சாந்தி. 58 வயதான இவர் தனது மகனுடன் வீட்டில் வசித்து வந்தார். இவரது மகன் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். சாந்தி வீட்டு வேலை செய்து வாழ்வாதாரத்தை ஈட்டி வந்தார்.
இந்நிலையில் நேற்று காலை சாந்தியும் அவரது மகனும் வேலைக்கு சென்றனர். இரவு சாந்தியின் மகன் வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பி போது வீட்டின் முன்பக்க கதவு சாத்தப்பட்டு இருந்தது. கதவை திறந்து உள்ளே சென்றபோது, சாந்தி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்துள்ளார். உடலில் வெட்டுக்காயங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த ரேஸ்கோர்ஸ் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
பின்னர் சாந்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
சாந்தியை கொலை செய்தது யார் என்பது தெரியவில்லை என்பதால் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் கைபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீட்டில் தனியாக இருந்த 58 வயதான பெண் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




