கோவை: மத்திய மாநில அரசுகளிடம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசு பெட்ரோல் டீசல் மற்றும் கேஸ் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும், 13 ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் உள்ள மீட்டர் கட்டணத்தை உயர் நீதிமன்ற உத்தரவின்படி உடனடியாக அமல்படுத்த வேண்டும், போக்குவரத்து கழக வரவு செலவு வித்தியாச தொகையை அரசு வழங்கிட வேண்டும், இடைதரகர்கள் மூலமாக VLTD கட்டணத்தை நிர்ணயிக்கக் கூடாது, பைக் டாக்ஸியை தடை செய்ய வேண்டும் அனைத்து ஆட்டோ ஓட்டுநர்களையும் இஎஸ்ஐ மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இணைத்திட வேண்டும் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி அவர்கள் உடனடியாக மத்திய மாநில அரசுகள் தங்களது கோரிக்கைகளுக்கு செவி சாய்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.
இது குறித்து பேட்டியளித்த முத்துக்குமார் (கோவை மாவட்ட சிஐடி ஆட்டோ தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர்) அமெரிக்கா ஈரான் போர் நிறுத்தப்பட்டு உலக சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை குறைந்த பொழுதும் பெட்ரோல் டீசல் விலையை குறைப்பதற்கு ஒன்றிய அரசு மறுத்து வருவதாகவும் எனவே உடனடியாக இந்த விலை உயர்வை குறைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
13 ஆண்டுகளில் மீட்டர் கட்டணத்தை மாற்ற வேண்டும் என்று இரண்டு முறை உயர் நீதிமன்றம் கூறியுள்ள நிலையிலும் இந்த 13 ஆண்டு காலமாக இருந்த அரசுகள் இந்த மீட்டர் கட்டணத்தை மாற்றி அமைக்கவில்லை என்று தெரிவித்தார். மூன்று கார்ப்பரேட் நிறுவனங்களின் நலனுக்காக மீட்டர் கட்டணத்தை அமலாக்கம் செய்யாமல் மாநில அரசுகள் செய்து வருவதாகவும் குற்றம் சாட்டினர்.
இந்த நிலையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள இந்த அரசு இது குறித்து ஆய்வு கூட்டம் நடத்தியது தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் குறிப்பிட்ட அவர் 1.5 கிலோமீட்டர் 70 ரூபாய் என்ற மீட்டர் கட்டணமும் அதனை அடுத்து வரும் ஒவ்வொரு கிலோமீட்டர் 30 ரூபாய் வீதம் உயர்த்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
BNS மோட்டார் வாகன திருத்த சட்டம் மோட்டார் வாகன தொழிலாளர்களுக்கு எதிராக இருப்பதாக கூறிய அவர் இதற்கு முன்பெல்லாம் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டால் காவல் நிலையத்திலேயே ஜாமீன் வழங்கப்பட்டு வந்ததாகவும் ஆனால் தற்பொழுது கொண்டுவரப்பட்டுள்ள இந்த புதிய சட்டத்தினால் நீதிமன்ற காவல் நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கப்படுவதாக தெரிவித்தார்.





