கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சியில் நடைபெற்றுவரும் மக்கள் தொகை
கணக்கெடுப்பு 2027-க்கான பயிற்சி வகுப்பினை மாநகராட்சி ஆணையாளர் நேரில் பார்வையிட்டார்.
கோயம்புத்தூர் மாநகராட்சி, கிழக்கு மண்டலம் வார்டு எண்.60-க்குட்பட்ட பெர்க்ஸ் பள்ளியில் நடைபெற்ற மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 க்கான பயிற்சி வகுப்பினை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா நேரில் பார்வையிட்டார்.
இப்பயிற்சி முகாமில், மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் தெரிவித்ததாவது, கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 பணியானது இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக 01 08.2026 முதல் 30.08.2026 வரை வீட்டு பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு பணிகள் நடைபெறும். இரண்டாம் கட்டமாக 01.02.2027 முதல் 28.02.2027 வரை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறும்இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 பணிகள் புவியியல் தகவல் அமைப்பு (GIS) முறையில் முதல் முறையாக செயல்படுத்தப்பட உள்ளது.
இந்த முதற்கட்ட வீட்டு பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு பணிகளுக்கு வருகின்ற 17.07.2026 முதல் 31.07.2026 வரை 15 நாட்கள் இணையதள வழியாக சுய கணக்கெடுப்பு தங்களின் வீட்டில் உள்ள நபர்களின் கைபேசி வழியாக இந்த (http://se.census.gov.in) இணையதள முகவரியில் சென்று தங்களின் வீட்டு பட்டியலை பதிவேற்றம் செய்த உடன் தங்களின் கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தியாக வரும் 11 இலக்கம் கொண்ட எண்களை பத்திரமாக சேமித்து தங்கள் வீட்டிற்கு வரும் மக்கள் தொகை கணக்கெடுப்பாளரிடம் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இதன் மூலம் மக்கள் தொகை கணக்கெடுப்பாளர் தங்களின் வீட்டு பட்டியலை சரி பார்த்து இணையதளத்தில் ஏற்றுவார். மேலும் இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் மாநகராட்சியின் 5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, மேற்கொள்ளப்பட உள்ளது. இக்கணக்கெடுப்பு பணிகளில் மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் என மொத்தம் 3,647 நபர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இப்பணிகளில் நபர் ஒருவருக்கு 200 வீடுகள் வீதம் தொகுதியாக ஒதுக்கப்பட்டு, இந்த 200 வீடுகளில் தங்களது கணக்கெடுப்பு பணியினை முழுவதுமாக செய்து முடிக்க வேண்டும் எனவும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-க்கான விண்ணப்ப படிவங்களில் கட்டடம் மற்றும் வீட்டின் விவரங்கள் குடும்ப விவரங்கள் தண்ணீர்குடும்ப சொத்துக்கள் மற்றும் டிஜிட்டல் வசதிகள், மின்சாரம். கழிப்பறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும். பொதுமக்களின் சுயவிவரங்கள் குறித்த 34 கேள்விகள் இடம்பெற்றுள்ளது.
இதன் மூலம் பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு வரும் பணியாளர்களுக்கு மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணியினை விரைவில் முடிக்க ஒத்துழைப்பு வழங்குமாறு மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார். இந்த பயிற்சி முகாமில் மாநகராட்சி துணை ஆணையாளர் குமரேசன், உதவி ஆணையர் தட்சிணாமூர்த்தி உட்பட மாநகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.





