கோவை: கோவை கவுண்டம்பாளையத்தில் ஒரே பதிவு எண்ணுடன் 2 பைக்குகள் இயக்கப்பட்ட சம்பவத்தில், இருவரை பிடித்த போலீசார் ரூ.7,200 அபராதம் விதித்து வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் ஒரே பதிவு எண்ணுடன் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் இயக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் வீடியோ வெளியானது. இதுகுறித்து தகவல் அறிந்த போக்குவரத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொண்டனர்.
போக்குவரத்து காவல்துறை துணை ஆணையர் மகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற விசாரணையில், காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் மற்றும் அவரது நண்பர் சிபி ஆகியோர் சிக்கினர்.
விசாரணையில், அஸ்வினின் மோட்டார் சைக்கிளின் நம்பர் பிளேட்டில் இடம்பெற்றிருந்த பதிவு எண்ணை சிபி தனது மோட்டார் சைக்கிளிலும் பயன்படுத்தி இயக்கியது தெரியவந்தது.
வீடியோ
இதையடுத்து, பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களுக்காக சிபி இயக்கிய மோட்டார் சைக்கிளுக்கு ரூ.7,200 அபராதம் விதிக்கப்பட்டதுடன், இரண்டு மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், அஸ்வின் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளுக்கு இன்சூரன்ஸ் இல்லாதது உள்ளிட்ட விதிமீறல்களுக்காக ரூ.700 அபராதம் விதிக்கப்பட்டது.
கோவை மாநகரில் இதுபோன்று ஒரே பதிவு எண்ணைப் பயன்படுத்தி இயக்கப்படும் வாகனங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து காவல்துறை துணை ஆணையர் மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.





