கோவை: கோவையில் தவெக கட்சிப் பாடலுடன் வந்து மருத்துவ மாணவர்கள் பட்டம் பெற்ற சம்பவம் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர்கள் முன்னிலையிலேயே ‘ரீல்ஸ்’ பாணி அரசியல் கலாச்சாரம் அரங்கேறியதாகவும், ‘சினிமா மாடல் அரசு’ எனவும் சமூக ஆர்வலர்கள் கண்டனங்களையும் விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர்.
கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் மற்றும் கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டு, இந்த ஆண்டு இளநிலை மருத்துவப் படிப்பை (MBBS) வெற்றிகரமாக முடித்த மாணவ-மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கினர்.
விழாவில் உச்சக்கட்ட சுவாரஸ்யமாகவும், விவாதப் பொருளாகவும் மாறிய ஒரு சம்பவம் அரங்கேறியது.
மருத்துவப் படிப்பை முடித்த மாணவர்கள் ஒவ்வொருவராக தங்களது பட்டங்களைப் பெற மேடை நோக்கி வரும்போது, அரங்கத்தின் ஒலிபெருக்கிகளில் திடீரென, “பொறி தெறிக்கப் வாரானே… புலி அடிக்க வாரானே… நடை வெடிக்க வாரானே… முடிவெடுக்க வாரானே… தனி ஒருத்தன் வெடிச்சு வரான்… தளபதி…” என்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) அரசியல் மாஸ் பாடலின் இசை உரத்த சத்தத்துடன் ஒலிபரப்பப்பட்டது.
மேடையில் அரசு அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் முன்னிலையிலேயே, சினிமா பாணியிலான த.வெ.க. கட்சிப் பாடலின் பின்னணி இசையோடு மாணவர்கள் தங்களது பட்டங்களைப் பெற்றுச் சென்றனர்.
இந்தச் சம்பவம் அங்கு இருந்த பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இடையே விவாதங்களையும் கடுமையான விமர்சனங்களையும் கிளப்பியுள்ளது.
தற்போதைய அமைச்சர்களும் அதிகாரிகளும் வெறும் ‘சினிமா மாடல்’ அரசை நடத்தி வருவதால்தான், அரசு விழாக்களில்கூட இதுபோன்ற அரசியல் நிகழ்வுகள் சர்வசாதாரணமாக அரங்கேறுகின்றன என சமூக ஆர்வலர்கள் விமர்சித்து வருகின்றனர்.
VIDEO
சினிமா மோகத்தால் மாணவர்களின் கல்விச் சூழல் சீரழிவதாகவும், உயர் கல்வி கற்கும் இடங்களிலாவது இதுபோன்ற அரசியல் மற்றும் சினிமா தாக்கங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும், தங்களது பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் தகுந்த அறிவுரைகளை வழங்க வேண்டும் என்றும் கல்வியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
ஐந்தாண்டு காலம் இரவு பகலாகக் கடினமாக உழைத்து புனிதமான மருத்துவப் பட்டத்தைப் பெறும் உன்னத தருணத்தில், ஒரு அரசியல் கட்சியின் மாஸ் பாடலை ஒலிக்கவிட்டுக் கொண்டாடியது மருத்துவத் துறையின் மாண்பைக் கெடுக்கும் செயல் என பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.


