கோவை: கோவையில் சாலையோரத்தில் 5 மாத ஆண் குழந்தை உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் குழந்தைகள் உதவி மையத்தில் பணியாற்றும் கலைவாணி (30), நேற்று காலை பணியில் இருந்தபோது பாப்பநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த பிரவீன் குமார் என்பவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு பெற்றார்.
அதில், பழையூர் நியூ சித்ராம்பலம் லே-அவுட் பகுதியில் சாலையோரத்தில் குழந்தை ஒன்று உயிரிழந்த நிலையில் கிடப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற கலைவாணி, அங்கு சுமார் 5 மாத ஆண் குழந்தை உயிரிழந்த நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் குழந்தையின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், குழந்தை அங்கு எப்படி வந்தது, யாரேனும் குழந்தையை கைவிட்டுச் சென்றார்களா, அல்லது வேறு ஏதேனும் குற்றச்சம்பவம் நடந்துள்ளதா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, குழந்தையை அங்கு விட்டுச் சென்றவர்கள் யார் என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் கோவை மக்களிடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


