கோவை: குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் அஜாக்கிரதையால் சிறிய பொருட்களை மூக்கு, தொண்டை, உணவுக்குழாய், காது மற்றும் மூச்சுக்குழாய்க்குள் சிக்கவைத்துக் கொள்ளும் சம்பவங்கள் ஏற்பட்டு வருகின்றன. சில நேரங்களில் பட்டாணி போன்ற சிறிய பொருட்கள்கூட மூச்சுக்குழாயில் சிக்கி உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என PSG மருத்துவமனை மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
சிறிய பொருட்கள் உடலுக்குள் சென்றால் அதனை வீட்டிலேயே எடுக்க முயற்சிக்காமல் உடனடியாக மருத்துவர்களை அணுக வேண்டும் என்றும், இதுபோன்ற அவசர நிலைகளுக்கு பல்துறை மருத்துவர்கள் இணைந்து 24 மணி நேரத்திற்குள் சிகிச்சை அளித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மருத்துவ இயக்குனர் புவனேஸ்வரன் கூறுகையில்,
“சிறிய அளவிலான பொருட்கள் மூக்கு, தொண்டை, உணவுக்குழாய் அல்லது காதுக்குள் சென்றுவிட்டால், அதனை அகற்றுவதற்கு சில நேரங்களில் மிகவும் சிரமப்பட வேண்டிய நிலை ஏற்படும்.
இந்த பிரச்சனையால் குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் பாதிக்கப்படுகின்றனர். இதுபோன்ற பொருட்களை 24 மணி நேரத்திற்குள் அகற்றுவதற்காக PSG மருத்துவமனையின் பல்துறை மருத்துவர்கள் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.” என்றார்.

நுரையீரல் மருத்துவ நிபுணர் வருண் கூறியதாவது:-
சிறிய பொருட்கள் தெரியாமல் மூச்சுக்குழாய்க்குள் செல்வது மிகவும் ஆபத்தானது. பெரியவர்களின் மூச்சுக்குழாய் சுமார் 2 முதல் 2.5 செ.மீ. அளவில் இருக்கும். ஆனால் குழந்தைகளுக்கு அது சுமார் 1 செ.மீ. அளவே இருக்கும்.
இதனால் பட்டாணி போன்ற சிறிய பொருட்கள்கூட மூச்சுக்குழாயில் சிக்கி உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும். இதுபோன்ற 30-க்கும் மேற்பட்ட சிகிச்சைகளை இதுவரை மேற்கொண்டுள்ளோம்.
குழந்தைகளுக்கு அவர்களின் வயதுக்கு ஏற்ற பொம்மைகளை மட்டுமே வழங்க வேண்டும். பொம்மைகளை வாயில் வைத்து விளையாடுகிறார்களா என்பதையும் பெற்றோர்கள் கவனிக்க வேண்டும்.

மேலும், செல்போனை பார்த்துக்கொண்டே சாப்பிடும் பழக்கத்தையும் தவிர்க்க வேண்டும். அவ்வாறு சாப்பிடும்போது கவனம் சிதறி, என்ன சாப்பிடுகிறோம் என்பதுகூட தெரியாத நிலை ஏற்படலாம்.
சிறிய பொருட்கள் நுரையீரல் போன்ற உடலின் ஆழமான பகுதிகளுக்குச் சென்று சிக்கிக்கொண்டால் அறுவை சிகிச்சை உள்ளிட்ட சிகிச்சைகள் தேவைப்படலாம்.
குழந்தைகள் ஏதேனும் பொருளை விழுங்கிவிட்டாலோ அல்லது மூச்சுக்குழாய்க்குள் சென்றுவிட்டதாக சந்தேகம் ஏற்பட்டாலோ, ‘அடுத்த நாள் கழிவறையில் வந்துவிடும்’ என மெத்தனமாக இருக்காமல் உடனடியாக மருத்துவர்களை அணுக வேண்டும். என்றார்.
காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர் கார்த்திகேயன் கூறியதாவது:-
காது, மூக்கு, தொண்டை பகுதிகளில் குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் அஜாக்கிரதையால் தேவையில்லாத பொருட்களை செலுத்திக் கொள்வது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன.
காதுக்குள் ஏதேனும் பொருள் சென்றுவிட்டால், அந்தப் பொருளின் தன்மையை அறியாமல் உடனடியாக தண்ணீர் ஊற்றுவது போன்ற செயல்களை செய்யக்கூடாது.
அதேபோல், கையால் அல்லது வேறு பொருட்களை பயன்படுத்தி காதுக்குள் சிக்கியுள்ள பொருளை எடுக்க முயற்சிக்கக்கூடாது. அவ்வாறு செய்தால் காது ஜவ்வு கிழிவது உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படலாம்.

மூக்குக்குள் சென்றுள்ள சிறிய பொருட்களையும் வீட்டிலேயே எடுக்க முயற்சிக்கக்கூடாது. அவற்றை எடுக்க முயற்சிக்கும்போது பொருள் மேலும் உள்ளே சென்று சிக்கிக்கொள்ளும் அபாயம் உள்ளது.
குழந்தைகளின் காதுகளை சுத்தம் செய்வதற்காக ‘பட்ஸ்’ பயன்படுத்தக்கூடாது. காது இயற்கையாகவே தன்னைத்தானே சுத்தப்படுத்திக் கொள்ளும் தன்மை கொண்டது. அதையும் மீறி காது அழுக்கு சேர்ந்திருந்தால், மருத்துவர்களின் உதவியுடன் அதனை அகற்ற வேண்டும். என்றார்.
குழந்தைகள் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் பாவை கூறியதாவது:-
குழந்தைகள் ஏதேனும் பொருளை விழுங்கிவிட்டால், அவசரநிலையைப் பொறுத்து முதலுதவி நடவடிக்கைகளை மேற்கொண்டு, உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும்.
விளையாட்டுப் பொருட்களில் இருக்கும் சிறிய பேட்டரிகள் மற்றும் காந்தங்களை குழந்தைகள் விழுங்கும் அபாயம் உள்ளது. குறிப்பாக, காந்தம் உடலுக்குள் சென்றால் குடலில் ஒட்டிக்கொண்டு, குடலில் ஓட்டை ஏற்படுத்தும் அளவுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்.
எனவே, குழந்தைகள் விளையாடும் பொம்மைகளில் சிறிய பேட்டரிகள், காந்தங்கள் உள்ளிட்ட ஆபத்தான பொருட்கள் உள்ளனவா என்பதை பெற்றோர்கள் கவனிக்க வேண்டும்.

மேலும், குழந்தைகளுக்கான பொருட்கள் மற்றும் பொம்மைகளின் பாதுகாப்பு தொடர்பாக உரிய விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இதற்காக அரசு தரப்பிலும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். என்றார்.
பெற்றோர்கள் கவனத்திற்கு:
குழந்தைகள் விளையாடும்போது சிறிய பொருட்களை வாயில் வைக்கிறார்களா என்பதை பெற்றோர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். வயதுக்கு ஏற்ற பொம்மைகளை மட்டுமே வழங்குவதுடன், பேட்டரி, காந்தம் போன்ற சிறிய பொருட்கள் குழந்தைகளின் கைகளில் சிக்காதவாறு பார்த்துக்கொள்வது அவசியம்.
மேலும், காது, மூக்கு, தொண்டை அல்லது மூச்சுக்குழாயில் பொருள் சிக்கியிருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டால், வீட்டிலேயே தண்ணீர் ஊற்றுவது, கையால் எடுப்பது, வேறு பொருட்களை பயன்படுத்துவது போன்ற முயற்சிகளை மேற்கொள்ளாமல் உடனடியாக மருத்துவர்களை அணுக வேண்டும்.
சிறிய பொருள் என்பதால் ஆபத்து குறைவு என்று அலட்சியமாக இருக்காமல், குறிப்பாக குழந்தைகள் தொடர்பான இதுபோன்ற சம்பவங்களில் உடனடி மருத்துவ கவனம் உயிரைக் காப்பாற்ற உதவும் என PSG மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.





